சென்னை | போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற பெண் கைது


சென்னை: போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற அந்நாட்டு பெண்ணை சென்னை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின்பேரில் குடியுரிமை அதிகாரிகள் நேற்று முன்தினம் விமான நிலையம் வந்த பயணிகள் அனைவரையும் சோதித்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் சென்னையில் இருந்து இலங்கை யாழ்ப்பாணம் செல்ல இருந்த பயணியை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.

இதை அடுத்து அவரது பாஸ்போர்ட் விபரங்கள் சேகரிக்கப்பட்டது. அப்போது அவர் இந்திய பாஸ்போர்ட்டை போலியாக வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் அவர் ஹைதராபாத் போலீஸாரால் தேடப்பட்டு வந்ததும் தெரியவந்தது. அவர் இலங்கையை சேர்ந்த சங்கீகா (29) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.

அவரது 9 வயது மகன் மற்றும் 6 வயது மகளை திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் தங்கி உள்ள சங்கீகாவின் தாயாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட இலங்கை பெண் சங்கீகா தெலங்கானா போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

x