லஞ்ச வழக்கில் சிக்கிய ஆயுதப்படை காவலர் உட்பட இருவர் சஸ்பெண்ட் @ சென்னை


சென்னை: லஞ்ச பெற்ற வழக்கில் சிக்கிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதே வழக்கில் சிக்கிய தாசில்தாரின் கணவரான ஆயுதப்படை காவலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் ராஜன்நகர், வெட்டுவாங்கேணி இணைப்பு சாலை சுமார் 40 அடி அகலம் வரை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சாலை ஆக்கிரமிப்பு காரணமாக சுமார் 20 அடியாக குறுகியதாம். இந்த சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. இதுபற்றி சோழிங்கநல்லூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தார். ஆனால் இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை கண்காணிக்க அடையாறு தாசில்தார் (நில அளவை பிரிவு) சரோஜா நியமிக்கப்பட்டார். இதனிடையே 20 அடிக்கு மேல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றினால் இந்த சாலை 40 அடி சாலையாக மாறி இப்பகுதி மக்களுக்கு பெரிய சாலை வசதி கிடைக்கும்.

இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள நிலத்தின் மதிப்பும் கோடிக்கணக்கில் உயரும். எனவே தனக்கு லஞ்சம் கொடுத்தால் ஆக்கிரமிப்பை அகற்றி தருவதாக கூறி முக்கிய நபர் ஒருவரிடம் தாசில்தார் சரோஜா லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, அப்பிரிவு போலீஸார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இது ஒருபுறம் இருக்க லஞ்சப் பணத்தை நேரில் வாங்க விருப்பம் இல்லாத தாசில்தார் சரோஜா, தனது கணவரும் ஆயுதப்படை காவலருமான பிரவீன்குமார் மூலம் அவரது நண்பரான பரங்கிமலை காவல் நிலைய குற்றப்பிரிவு முதல்நிலைக் காவலர் அருண்குமார் என்பவர் மூலம் லஞ்ச பணம் சுமார் ரூ.3 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. அப்போது, மறைவில் இருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் அருண்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் சரோஜாவும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், லஞ்ச விவகாரத்தில் சிக்கிய காவலர்கள் அருண்குமார், பிரவின் குமார் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

x