கொட்டாரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல்


கொட்டாரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சோதனை செய்யும் லஞ்ச ஒழிப்பு போலீஸார்.

நாகர்கோவில்: கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இன்று, கணக்கில் வராத ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவிற்கு கட்டாய லஞ்சம் வசூல் செய்வதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து இந்த அலுவலகத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு ஏடிஎஸ்பி ஹெக்டேர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜான் பெஞ்சமின், சிவசங்கரி ஆகியோர் அடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

சார் பதிவாளர் பொறுப்பு அம்ரோஸ் (32) என்பவரை சோதனையிட்ட போது அவரது பேன்ட் பாக்கெட்டில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500 பணம் இருந்தது. அது கணக்கில் வராத பணம் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த அலுவலக உதவியாளர் மோகன் பாபுவிடம் இருந்தும் ரூ.1000 பறிமுதல் செய்யப்பட்டது. இருவரிடமும் 3 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அம்ரோஸ் செல்போனையும் போலீசார் கைப் பற்றி விசாரணை நடத்தினர். சோதனையின் போது கைப் பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சார் பதிவாளர் பொறுப்பு அலுவலர் அம்ரோஸ், உதவியாளர் மோகன் பாபு மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x