ஒழுக்கம் தவறிய உறவின் விபரீதம்: ஒரே வீட்டில் இருவர் தூக்கிட்டு தற்கொலை


பெரும்பாக்கம்: சென்னை பெரும்பாக்கத்தில் ஒழுக்கம் தவறிய உறவு காரணமாக ஒரே வீட்டில் இருவர் தனித் தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும் ஒழுக்கம் தவறிய உறவு வைத்திருந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களின் இந்த உறவானது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக இருவரது வீட்டுக்கும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இருவரும் தங்களது குடும்பத்தைப் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்துள்ளனர். அதே சமயம் இருவருக்கும் இடையிலான ஒழுக்கம் தவறிய உறவும் தொடர்ந்திருக்கிறது. இதனால் இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் பிரளயம் வெடித்ததால் இவரும் விரக்தி அடைந்தனர்.

நம்மை வைத்து குடும்பங்களுக்குள் பிரச்சினை அதிகமாவதால் இருவரும் தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தனர். இது தொடர்பாக இருவருக்கும் பொதுவான தோழி ஒருவருக்கு, ‘எங்களை வாழ விடமாட்டார்கள் அதனால் நாங்கள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறோம்’ என வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். வாய்ஸ் மெசேஜ் தொடர்பாக அவர்களின் தோழி பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்திருக்கிறார்.

இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது வீடு உள்பக்கம் பூட்டியிருந்தது. ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது படுக்கை அறையில் அந்தப் பெண் புடவையில் தூக்கிட்டும், ஹாலில் அந்த ஆண் சால்வையில் தூக்கிட்டும் தற்கொலை செய்திருப்பது தெரிந்தது. போலீஸார், இருவரது உடல்களையும் கைப் பற்றி தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x