குன்றத்தூர் | செங்கல் சூளை தொழிலாளி கொலை தொடர்பாக 3 பேர் கைது


ராஜேஷ், விஜய், திருமலை

குன்றத்தூர்: விழுப்புரம் மாவட்டம், ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(30), இவரது மனைவி செல்லம்மாள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

ராஜேஷின் பெற்றோர் குன்றத்தூரை அடுத்த தெற்கு மலையம்பாக்கத்தில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் கடனை அடைப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் செங்கல் சூளையில் தங்கி பணிபுரிந்து வந்தார்.

2 தினங்களுக்கு முன்பு செம்பரம்பாக்கம் ஏரிக்கரையையொட்டி உள்ள பகுதியில் ராஜேஷ் நடந்து சென்றபோது அந்த வழியாக பைக்கில் வந்த 3 பேர் அவரை கத்தியால் வெட்டிவிட்டு அவரிடம் இருந்து செல்போன், பணம் ஆகியவற்றை பறித்து சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த வழக்கை கொலை வழக்காக குன்றத்தூர் போலீஸார் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தெற்கு மலையம்பாக்கத்தை சேர்ந்த விஜய்(23), பொன்னேரியை சேர்ந்த திருமலை (19), 14 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரித்த போது செம்பரம்பாக்கம் ஏரிக்கரையின் அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தபோது அங்கு வந்த ராஜேஷை மடக்கி கத்தியை காட்டி மிரட்டி செல்போன் கேட்டும் அவர் கொடுக்காததால் கத்தியால் அவரை வெட்டிவிட்டு அவரிடமிருந்து செல்போன், பணம் ஆகியவற்றைப் பறித்து சென்றதை ஒப்புக்கொண்டனர்.

x