செல்போன் தராததால் செங்கல் சூளை தொழிலாளி வெட்டிக் கொலை: சிறுவன் உட்பட மூவர் கைது


கொலை செய்யப்பட்ட ராஜேஷ்

குன்றத்தூர்: செல்போனை தராததால் குன்றத்தூரில் செங்கல் சூளை தொழிலாளி வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட மூவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (30), இவரது மனைவி செல்லம்மாள். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும், பத்து மாத பெண் குழந்தையும் உள்ளனர். ராஜேஷின் பெற்றோர் குன்றத்தூரை அடுத்த தெற்கு மலையம்பாக்கத்தில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களது கடனை அடைப்பதற்காக அண்மையில் ராஜேஷும் தனது குடும்பத்தினருடன் செங்கல் சூளையில் தங்கி பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு ராஜேஷ் செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை ஓட்டியுள்ள பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த போது அந்த வழியாக பைக்கில் வந்த 3 பேர் அவரை கத்தியால் வெட்டிவிட்டு அவரிடம் இருந்து செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். இதில், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த குன்றத்தூர் போலீஸார் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார்? என்பது குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அப்போது, தெற்கு மலையம்பாக்கத்தை சேர்ந்த விஜய் (23), பொன்னேரியைச் சேர்ந்த திருமலை(19), மற்றும் 14 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்ததால் அவர்கள் மூவரையும் போலீஸார் இன்று கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரித்த போது, ‘தாங்கள் செம்பரம்பாக்கம் ஏரிக்கரையின் அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தபோது, அங்கு வந்த ராஜேஷை மடக்கி கத்தியை காட்டி மிரட்டி செல்போன் கேட்டதாகவும், அவர் கொடுக்காததால் கத்தியால் அவரை வெட்டிவிட்டு அவரிடமிருந்து செல்போன், பணம் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு ஓடிவிட்டதாகவும்’ மூவரும் ஒப்புக்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து செல்போன், பணம், பைக், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x