குறைவாகவோ, அதிகமாகவோ தண்ணீர் குடித்தால் ஆபத்தா? - 10 முக்கியக் குறிப்புகள்


1 / 11
ஒருநாளைக்கு 2 லிட்டருக்கும் அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதிக தண்ணீர் குடிக்கும் போது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியது உள்ளது. அதனால் சிறுநீரகம் பலவீனம் அடைந்து விடும் என சிலர் அச்சமூட்டுகின்றனர். இதில் எது உண்மை அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதா? அடிக்கடி சிறுநீர் கழித்தால் சிறுநீரகம் பலவீனமாகி விடுமா? - இதோ பொதுநல மருத்துவர் கு.கணேசன் தரும் வழிகாட்டுதல்...
2 / 11
தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் குடித்தால், ஆரோக்கியமுள்ள சிறுநீரகம் அதைச் சிறுநீரில் வெளியேற்றிவிடும். அது பலவீனம் ஆவதில்லை. எனவே, ஆபத்தில்லை. சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால், இந்தச் சந்தேகம் தேவையில்லை.
3 / 11
சிறுநீரகத்தில் பிரச்சினை உள்ளவர்கள், இதயச் செயலிழப்பு (Heart failure) ஏற்பட்டவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தண்ணீர் குடிக்க வேண்டும். இவர்களுக்கு மற்றவர்களைவிடக் குறைவாகவே தண்ணீரின் தேவை இருக்கும். இது தெரியாமல் எப்போதும்போல் இவர்கள் தண்ணீரைக் குடித்தால் சிறுநீரகத்துக்கும் இதயத்துக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு.
4 / 11
தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது போதுமானது அல்ல! அவ்வாறு தண்ணீரைக் குடிப்பது குறைகிறபோது பால், மோர், தயிர், இளநீர், பதனீர், நீராகாரம் குடிப்பதை அதிகப்படுத்த வேண்டும்; நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிகமாகச் சாப்பிட வேண்டும்.
5 / 11
பொதுவாக, நாம் தினமும் குடிக்கும் தண்ணீரின் அளவும் உடலிலிருந்து வெளியேறும் தண்ணீரின் அளவும் சமமாக இருக்க வேண்டும். அப்போதுதான் உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்து வராது. இதற்குச் சிறுநீரகம் உதவுகிறது. உடலில் நீரின் அளவு சிறிது அதிகமாகிவிட்டாலும், சிறுநீரகங்கள் இரண்டும் அதிகமாக வேலைசெய்து அதிகப்படியாக உள்ள நீரைச் சிறுநீரில் வெளியேற்றி, உடல் திரவங்களைச் சமன்படுத்திவிடும்.
6 / 11
ஆரோக்கியமாக உள்ள ஒருவர் தினமும் 1,200-லிருந்து 1,500 மி.லி.வரை சிறுநீர் கழிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் சேரும் யூரியா, கிரியேட்டினின் போன்ற கழிவு உப்புகள் சிறுநீரில் சரியாக வெளியேற முடியும். இதற்குத் தினமும் 2,400-லிருந்து 3,000 மி.லி.வரை தண்ணீர் குடிக்க வேண்டும். கோடையில் அதிகபட்சமாகத் தினமும் 4 லிட்டர்வரை தண்ணீர் குடிக்கலாம்.
7 / 11
தேவைக்குத் தண்ணீர் குடிக்கிறீர்களா என்பதையும், உடலில் தண்ணீரின் அளவு சரியாக இருக்கிறதா என்பதையும் சிறுநீரைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். வெளிர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் காணப்பட்டால், நீங்கள் தேவைக்குத் தண்ணீர் குடிக்கிறீர்கள். அடர்ந்த மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போனால், நீங்கள் தேவைக்குத் தண்ணீர் குடிக்கவில்லை. அடுத்து, நாவறட்சி எடுப்பதும் தொண்டை வறண்டு தண்ணீர் தாகம் எடுப்பதும் உடலில் தண்ணீர் அளவு குறைவாக உள்ளது என்பதை இனம் காட்டும் முக்கியமான அறிகுறிகளே.
8 / 11
கோடையில் அதிகப்படியாகும் வெப்பத்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்து, நீர் வறட்சிப் பிரச்சினை ஏற்படுகிறது. சிறுநீர்க்கடுப்பு ஏற்படுகிறது. தோல் வறட்சி, தலைவலி, கிறுகிறுப்பு, மயக்கம் போன்றவையும் உடலில் தண்ணீரின் அளவு குறைந்துவிட்டது என்பதைக் காட்டும் அறிகுறிகளே!
9 / 11
சிறுநீரகக் கல் உருவாவதற்கும் மலச்சிக்கலுக்கும் பல காரணங்கள் இருந்தாலும் அடிப்படைக் காரணம், உடலில் திரவ அளவு குறைவதுதான். அதாவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான்.
10 / 11
தண்ணீரைத் தேவைக்கு அதிகமாகக் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகளைவிட, குறைவாகக் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள்தான் உடலில் அதிகம்.
11 / 11
சரி, தேவையில்லாமல் அதிகமாகத் தண்ணீர் குடிக்கிறீர்கள் என்றாலும், உடலில் நீரின் அளவு அதிகமாகிவிட்டது என்றாலும் சிறுநீரகம், அதை வெளியேற்றச் சிரமப்படுகிறது என்பதைச் சில அறிகுறிகள் மூலம் தெரிவித்துவிடும். முகம் வீங்குவது இதற்குரிய முக்கிய அறிகுறி. கால் பாதங்கள் வீங்குவது, வயிறு வீங்குவது போன்ற அறிகுறிகளும் தோன்றும். அப்போது மருத்துவரின் ஆலோசனைப்படி தண்ணீர் குடிக்க வேண்டும்.
x