உலகம் முழுவதும் வெப்ப அலையால் ஆண்டுக்கு 1.53 லட்சம் பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகம், உலக அளவில் ஏற்படும் வெப்ப அலைகள் குறித்தும், அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் ஆய்வு செய்தது. அதன் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையின்படி, உலக அளவில் வெப்ப அலைகளால் ஒவ்வொரு ஆண்டும் 1.53 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதில் இந்தியா மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது. இந்தியாவில் வெப்ப சலனம் காரணமாக ஆண்டுக்கு சுமார் 30,000 பேர் உயிரிழப்பது ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த புள்ளி விவரங்கள் கடந்த 1990-ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகள் வரை எடுக்கப்ட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் 1.53 லட்சம் இறப்புகளில், இந்தியாவில் அது 20 சதவீதமாக உள்ளது. வெப்ப சலன இறப்புகளில் இந்தியாவிற்கு அடுத்தபடியாக சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. சீனாவில் உயிரிழப்பு 14 சதவீதம், ரஷ்யாவில் 8 சதவீதமாக உள்ளன.
இந்த ஆய்வின்படி ஒவ்வொரு ஆண்டும் கோடையில் 1.53 லட்சம் பேர் இறக்கின்றனர். அவர்களில் 50 சதவீதம் பேர் ஆசியாவில் இறப்பதாக மோனாஷ் பல்கலைக்கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் 30 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர்.
உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு மில்லியன் மக்களில் 236 பேர் வெப்ப அலையால் இறக்கின்றனர். ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்கள் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட மல்டி-கன்ட்ரி மல்டி-சிட்டி (எம்.சி.சி) ஆராய்ச்சி நெட்வொர்க்கிலிருந்து தரவைப் பயன்படுத்தி இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இதில் 43 நாடுகளில் 750 இடங்களில் தினசரி இறப்புகள் பற்றிய ஆய்வும் அடங்கியுள்ளது.