அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஹாமில்டன் அரங்கை பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் சூறையாடினர். இதையடுத்து அவர்களை நியூயார்க் போலீஸார் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தினர்.
இஸ்ரேல் - பாலஸ்தீன ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக அமெரிக்காவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் கடந்த சில நாள்களாக மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நியூயார்க் நகரின் மத்தியில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஹாமில்டன் அரங்கை பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் கைப்பற்றி போராட்டம் நடத்தினர். மேலும் அந்த அரங்கை போராட்டக்கரார்கள் சூறையாடினர்.
இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் நியூயார்க் போலீஸாரின் உதவியை நாடினர். அதன்பேரில் நேற்று மதியம் நியூயார்க் போலீஸார் கொலம்பியா பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்து, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேர நடவடிக்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களும் வெளியேற்றப்பட்டதாகவும், இந்த நடவடிக்கையில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் நியூயார்க் போலீஸார் தெரிவித்தனர்.
நியூயார்க் நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொலம்பியா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்கலைக்கழகத்தின் ஹாமில்டன் அரங்கில் போராட்டம் நடத்தியவர்களில் பெரும்பாலானோர், அங்கு பயிலும் மாணவர்கள் அல்ல என்றும், அவர்களுக்கும் பல்கலைக்கழகத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.