சீனாவில் கடந்த திங்கள் அன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது. இது மேலும் உயரக்கூடும் என அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
வடமேற்கு சீனாவின் கன்சு மற்றும் கிங்காய் மாகாணங்களில் 6.2 ரிக்டர் என்றளவில் நிலநடுக்கம் நேரிட்டதாக தெரிய வருகிறது. திங்கள் இரவு நிலநடுக்கம் நேரிட்டதை சீனாவின் அரசு ஊடகங்கள் உறுதி செய்தன.
நிலநடுக்கத்தால் வீடுகள் சிதிலமானது; மின்சாரம் மற்றும் குடிநீர் சேவைகள் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக குடிமக்கள் இரவில் மேலும் பரிதவிப்புக்கு ஆளானார்கள். மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் வீடுகளை துறந்து வீதிகளில் மக்கள் அடைக்கலமானார்கள்.
தகவல் தொடர்புகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணிகள் தற்போது வரை நீடித்து வருகிறது. இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் அபாய கட்டத்தில் உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என அந்த நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.