ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி தப்புமா?... உட்கட்சிப் பூசலில் சிக்கித் தவிக்கும் ஆளும் கட்சி!


ரிஷி சுனக்

புலம் பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் திட்டம் தொடர்பாக இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளதால் அந்த நாட்டின் பிரதமர் ரிஷி சுனக்கின் பதவி ஆட்டம் கண்டுள்ளது.

இங்கிலாந்து

சட்டவிரோதமாக, சிறுபடகுகள் மூலம் இங்கிலாந்துக்குள் நுழைந்து புகலிடம் கோரும் புலம் பெயர்ந்தோரை, ருவாண்டா என்னும் ஆப்பிரிக்க நாட்டுக்கு நாடு கடத்தும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.

ஆனால், உச்ச நீதிமன்றம் அந்த திட்டம் சட்டவிரோதமானது என்று கூறிவிட்டதால், அதை நிறைவேற்றுவதில் சிக்கல் உருவானது. ஆனாலும், அதை சட்டமாக்க வேண்டும் என்பதில் அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் உறுதியாக இருக்கிறார். அவர் சார்ந்த கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியினரில், பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் உள்துறைச் செயலர் சுவெல்லா உட்பட பலர், ருவாண்டா திட்டத்தை நிறைவேற்றுமாறு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அதே கட்சியைச் சார்ந்த புலம்பெயர்தல் அமைச்சரான ராபர்ட் ஜென்ரிக் இந்த திட்டம் சரியானது அல்ல என எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்திருக்கிறார். அதனால் ரிஷி சுனக் இந்த விஷயத்தில் குழப்பத்தில் இருக்கிறார். இந்நிலையில், வரும் செவ்வாய்க்கிழமை, ருவாண்டா திட்டம் தொடர்பான மசோதா மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு ஒன்று நடைபெற உள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளே ஒரு தரப்பினர் ருவாண்டா திட்டத்தின் கடுமை போதாது என்று கூற, மற்றொரு தரப்பினர், அதாவது எதிர்க்கும் தரப்பினர், அது சர்வதேச சட்டத்தை மீறுவதாக அமையக்கூடும் என கவலை தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், ரிஷி பிரதமரானதை சகித்துக் கொள்ளமுடியாமல் மனம் புழுங்கிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டமும் கன்சர்வேட்டிவ் கட்சியில் உள்ளது.

அவர்களில் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள், புலம் பெயர்தல் அமைச்சரான ராபர்ட் ஜென்ரிக் ராஜினாமா செய்வதற்கு முன்பே, ரிஷி மீது நம்பிக்கை இல்லை என கடிதம் எழுதிவிட்டதாகவும், அப்படியே 53 பேர் கடிதங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில், ரிஷி, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவராகவும் பிரதமராகவும் பதவியில் நீடிக்க வேண்டுமா என நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டி வரலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், ரிஷியோ, இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் ருவாண்டா திட்டம் மீதான வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார். மக்களுக்காக போராடுவோம், மக்கள் பக்கம் நிற்கிறோம் என்பதை மக்களுக்குக் காட்டுவோம் என்கிறார் அவர். தங்களுக்குள்ளேயே பிரிவினை கொண்ட கட்சிகள் வெற்றி பெறுவதில்லை என்று கூறியுள்ள ரிஷி, நாம் போட்டியிட வேண்டியது எதிர்க்கட்சிகளுடன் தானேயொழிய, நமக்குள்ளேயே அல்ல என்றும் கூறியுள்ளார்.


இதையும் வாசிக்கலாமே...

தமிழகத்தில் நிலநடுக்கம்... பீதியில் மக்கள்

இன்றும் 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! தலைமையாசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு!

x