அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதிதான்... சீனாவின் கருத்துக்கு அமெரிக்கா கடும் கண்டனம்!


இந்தியா-சீனா

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதிதான் எனவும், சீனா அதை சொந்தம் கொண்டாட முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்திற்குச் சென்றிருந்தார். அங்கு பல்வேறு புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டியிருந்தார். இந்த சம்பவத்திற்கு சீனா கண்டனம் தெரிவித்திருந்தது. குறிப்பாக ஜன்கான் என்ற சீனாவின் ஒரு பகுதியான அருணாச்சலப் பிரதேசம், தங்கள் நாட்டின் பகுதி எனவும், இங்கு இந்தியா திட்டங்களை செயல்படுத்துவதை கடுமையாக எதிர்ப்பதாகவும் சீனப் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

அருணாச்சலப் பிரதேசம்

சீனாவின் இந்த கருத்திற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தது. அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதி எனவும், இந்தியாவின் நலத்திட்ட செயல்பாடுகள் எப்போதும் அருணாச்சல பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி கொடுத்திருந்தது. இந்த நிலையில் சீனாவின் கருத்து குறித்து அமெரிக்க அதிபர் பைடன் தலைமையிலான அரசு தனது கருத்தை தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை உதவி செய்தித் தொடர்பாளர் வேதாந்த் பட்டேல்

அந்நாட்டு நேரப்படி புதன்கிழமை மாலை செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை அமைச்சக உதவி செய்தி தொடர்பாளர் வேதாந்த் பட்டேல், சீனாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி என குறிப்பிட்ட அவர், சர்வதேச விதிகளுக்கு மாறாக சீனா, இந்தியாவின் ஒரு பகுதியை ராணுவம் உட்பட எந்த வகையில் ஆக்கிரமித்தாலும் அது தவறு எனவும் தெரிவித்தார்.

சீனா, அருணாச்சலப் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடுவது இது முதல் முறை அல்ல. பல ஆண்டுகளாகவே அருணாச்சல் அருகில் உள்ள சர்வதேச எல்லையில், குடிமக்களை குடியமர்த்துவது, சாலைகள் அமைப்பது, கிராமங்கள் அமைப்பது, ராணுவ தளங்களை அமைப்பது உள்ளிட்ட அத்துமீறல்களில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x