தென்கொரியா உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கிடையே தென்கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட்டைப் பயன்படுத்தி வாண்டென்பெர்க் விண்வெளி தளத்தில் இருந்து இந்த உளவு செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின்கீழ் தென்கொரியா 2025-ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ள 5 உளவு செயற்கைக்கோள்களில் இதுவே முதன்மையானது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால் வானிலை காரணமாக பின்பு தள்ளி வைக்கப்பட்டது. இதுவரை தென்கொரியா விண்வெளியில் தனக்கென ராணுவ உளவு செயற்கைக்கோள்களை கொண்டிருக்கவில்லை.
வடகொரியாவின் நகர்வுகளை கண்காணிப்பதற்கு அமெரிக்க உளவு செயற்கைக்கோள்களையே நம்பியிருந்தது. வடகொரியா தனது உளவு செயற்கைக்கோளை கடந்த வாரம் வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியதாகக் கூறியது. அதற்கான புகைப்படங்களை வடகொரியா இன்னும் வெளியிடவில்லை. இந்நிலையில் தென்கொரியாவும் தனது ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...