அதிர்ந்தது ஆப்கானிஸ்தான்... 5.3 ரிக்டர் நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி!


ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று காலை 5.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சேத விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 11-ம் தேதி 5.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் கந்தஹார் பகுதியில் ஏற்பட்டது. இதில் கந்தஹார் தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்த நிலையில், 21 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

இந்நிலையில் கடந்த 18-ம் தேதி மீண்டும் அதே பகுதியில் 4.3 ரிட்டர் என்ற அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டிருந்தது. ஆனால் இந்த நிலநடுக்கத்தின் போது சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை. இன்று அதிகாலை 6:05 மணி அளவில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் 5.3 என்ற அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 5.3 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது

நிலப்பரப்பிலிருந்து 130 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்திய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருவதால் ஆப்கானிஸ்தான் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

x