நாடு கடந்த குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு புகலிடம் வழங்கக்கூடாது... இன்டர்போலுக்கு இந்தியா வேண்டுகோள்!


இன்டர்போல் கூட்டம்

நாட்டுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு புகலிடம் வழங்கக்கூடாது என இன்டர்போல் கூட்டத்தில் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் இன்டர்போல் அமைப்பின் 91-வது பொதுச்சபைக் கூட்டம் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. நான்கு நாள்கள் நடந்த கூட்டத்தில், ஆஸ்திரியா, ஐக்கிய அரபு எமிரேட், அமெரிக்கா, இங்கிலாந்து, நேபாளம், ஆஸ்திரலியா உள்ளிட்ட பல நாடுகள் கலந்து கொண்டன.

சிபிஐயின் இயக்குனர் பிரவீன் சூட் தலைமையிலான இந்திய குழு பங்கேற்று பல்வேறு நாடுகளின் சட்ட அமலாக்கத் துறையினருடன் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வெளிநாடுகள் சில பாதுகாப்பான இடம் வழங்கும் பிரச்சினை குறித்து இந்த இன்டர்போல் கூட்டத்தில் இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து சிபிஐ செய்தி தொடர்பாளர் கூறுகையில்,'' நாடுகளுக்கு அப்பால் இருந்து கொண்டு தீவிரவாதம், ஆன்லைனில் தீவிரவாத கருத்துகளைப் பதிவிடுவது, இணைய வழியிலான நிதி மோசடி குற்றங்கள் போன்றவற்றைத் தடுக்க இன்டர்போல் மூலம் ஒருங்கிணைந்த உடனடி நடவடிக்கை தேவை.

இன்டர்போல்

நாடு கடந்த குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு வெளிநாடுகள் பாதுகாப்பு புகலிடம் வழங்கக்கூடாது. அதே போல், அவர்களுக்கு நிதி கிடைப்பதற்கான ஆதாரங்களையும் தடை செய்ய வேண்டும். இன்டர்போல் மற்றும் சர்வதேச அளவில் சட்ட அமலாக்க அமைப்புகளுடனான மேம்பட்ட உறவால் இந்த ஆண்டில் மட்டும் தேடப்படும் குற்றவாளிகள் 24 பேர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

ஒரு வருடத்தில் இத்தனை குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டது இதுதான் முதல்முறை. அதே போல் பல்வேறு நாடுகளில் தலைமறைவாயிருக்கும் 184 குற்றவாளிகளின் இருப்பிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவர்களையும் நாடு கடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் முறைப்படி நடந்து வருகிறது என கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியது" என்று தெரிவித்தார்.

x