பராகுவே நாட்டின் வேளாண் அமைச்சரவையில் பணியாற்றிய அதிகாரி அர்னால்டோ சமோரா பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதற்கு நித்தியானந்தாவே காரணம் என தெரியவந்துள்ளது.
வழக்குகளில் இருந்து தப்பிக்க இந்தியாவில் இருந்து தப்பிச்சென்ற நித்தியானந்தா கைலாசா என்ற ஒரு புதிய தேசத்தை உருவாக்கி அதனை ஆண்டுகொண்டு இருக்கிறார். தனக்கென ஒரு தேசத்தை அவர் வகுத்துக் கொண்டாலும் அது எங்கிருக்கிறது என்பது கூட இதுவரை யாருக்கும் தெரியாது. நித்தியானந்தாவின் அந்த புனைவு தேசமான கைலாசாவோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள காரணத்துக்காகவே பராகுவே நாட்டின் வேளாண்துறை உயர் அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கைலாசாவின் பிரதிநிதிகள் அங்குள்ள உள்ளூர் நிர்வாக அதிகாரிகளுடன் பிரகடனங்கள் மேற்கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டன. கைலாசாவோடு அவர் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து சமூக ஊடகங்களில் கேலியான பதிவுகள் வரத் தொடங்கியது.
அதன் பிறகே அந்நாடு கைலாசா குறித்து அறிந்து கொண்டுள்ளது. சுயமாக அறிவித்துக் கொண்ட பிராந்தியம் என எதுவுமில்லாத கைலாசா ஒரு ஏமாற்றுவேலை என தென் அமெரிக்க நாடான பராகுவே உணர்ந்த பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதவி விலகிய அதிகாரி, தனக்கு கைலாசா தேசம் எங்கிருக்கிறது என தெரியாது என்றும், பராகுவே நாட்டுக்கு நீர்ப்பாசனம் உள்பட பல்வேறு வகையில் அவர்கள் உதவுவதாகக் குறிப்பிட்டதால் அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த கைலாசா தேசத்தின் பிரதிநிதிகள், ஜெனீவா ஐக்கிய நாடுகளின் கூட்டத்தில் இந்தாண்டு இரண்டு முறை பங்கேற்றுள்ளனர். அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டும் உள்ளனர்.
இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் குற்றவாளியான நித்தியானந்தா, தற்போது எங்கிருக்கிறார் என்பது தெரியாத நிலையில் கைலாசாவை சகோதர தேசமாக அங்கீகரித்த நியூ ஜெர்ஸி மாகாணம், அதன் பிறகு கடந்த மார்ச்சில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை ஒப்புக்கொண்டு கைலாசாவுடன் ஒப்பந்தத்தை ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.