ரஷ்யாவில் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில் விளாடிமிர் புதினே அதிபராவார் என்ற கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவில், நாடு முழுவதும் 1 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அதிபர் தேர்தல் தொடங்கியுள்ளது. காலை முதல் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். ரஷ்யா மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின் தூதரகங்களிலும் வெளிநாடு வாழ் ரஷ்யர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை (மார்ச் 17) வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ரஷ்ய பகுதிகள் மற்றும் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் உள்ள மக்கள் முதல் முறையாக இந்த தேர்தலில் வாக்களிக்கின்றனர்.
இந்த தேர்தலில் நான்குமுனை போட்டி நிலவுகிறது. அதிபர் புதின் சுயேட்சையாக போட்டியிடும் சூழலில் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயக கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களத்தில் உள்ளன. 11 கோடியே 23 லட்சம் ரஷ்யர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வலுவான எதிர்க்கட்சி வேட்பாளர் இல்லாததால் புதின் 5வது முறையாக அதிபராக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் புதின் 76.7 சதவீத வாக்குகளை புதின் பெற்றிருந்தார். புதின் கொண்டுவந்த அரசியல் சாசன திருத்தத்தின்படி 2036-ம் ஆண்டு வரை அவர் அதிபராக தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஐந்தாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. மாஸ்கோ லெவாடா (LEVADA) மையம் நடத்திய கருத்து கணிப்பில் சுமார் 86 சதவீதம் பேர் புதினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக வலம் வரும் புதின் ரஷ்யாவின் அதிபராக சுமார் 20 ஆண்டு காலமாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.