'பூடானுக்கு வாருங்கள்...’ பூடான் பிரதமரின் அழைப்பை ஏற்றார் பிரதமர் மோடி!


இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே

அடுத்த வாரம் பூடானுக்கு வருமாறு அந்நாட்டு பிரதமர் ஷெரிங் டோப்கே விடுத்த அழைப்பை, பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் பிரதமர் டாஷோ ஷெரிங் டோப்கே, நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது அடுத்த வாரம் தங்கள் நாட்டுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு ஷெரிங் டோப்கே அழைப்பு விடுத்தார். இதனை பிரதமர் மோடியும் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அடுத்த வாரம் பூடானுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு பூடான் மன்னர் சார்பில் அந்நாட்டு பிரதமர் ஷெரிங் டோப்கே அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை பிரதமர் ஏற்றுக்கொண்டார்.

இந்தியா - பூடான் நட்பு

உள்கட்டமைப்பு மேம்பாடு, இணைப்பு, எரிசக்தி, நீர்மின் ஒத்துழைப்பு, மக்களிடையே பரிமாற்றம் மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு கூட்டுறவின் பல்வேறு துறைகளின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். சிறப்பு, தனித்துவமான இந்தியா-பூடான் நட்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் அர்ப்பணிப்பை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்

பூடானின் வளர்ச்சி, முன்னுரிமைகளில் நம்பகமான மற்றும் மதிப்புமிக்க பங்குதாரராக திகழும் இந்தியாவுக்கு பூடான் பிரதமர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

நெல்லையப்பா் கோயிலில் கோலாகலம்... கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரத் திருவிழா!

x