இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரையிலான ஓராண்டில் 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர் விசாக்களை வழங்கியுள்ளது. இதுவரை வழங்கப்பட்ட மாணவர் விசாக்களில் ஓராண்டில் இதுவே அதிகபட்ச சாதனையாக பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க தூதரக அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில்,"இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகம் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர் விசாக்களை வழங்கியுள்ளது. கடந்த 2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் (2023 கூட்டாட்சி ஆண்டு), காலக்கட்டத்தில் சுற்றுலா, மருத்துவம், வணிகம் போன்ற பிரிவுகளில் தற்காலிக அடிப்படையில் உலகம் முழுவதும் 10 மில்லியனுக்கும் அதிகமான விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா தூதரகங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தற்காலிக விசா விண்ணப்ப பரிசீலனை நடைபெற்றுள்ளது. 2023 கூட்டாட்சி ஆண்டில் வணிகம் மற்றும் சுற்றுலா விசாக்கள் மட்டுமே 8 மில்லியனுக்கும் அதிகமாக வழங்கப்பட்டுள்ளன.
இது கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து எந்த கூட்டாட்சி ஆண்டிலும் இல்லாத அதிகபட்சமாகும். அதேபோல், மாணவர் விசாக்கள் மட்டும் 6 லட்சத்துக்கும் அதிகமாக வழங்கப்பட்டுள்ளன. இது கடந்த 2017-லிருந்து எந்த ஆண்டிலும் இல்லாத அதிகபட்சமாகும்.
அமெரிக்காவுக்கு அடிக்கடி வருபவர்களில் தேசிய பாதுகாப்பு நெறிமுறைகளைத் தீவிரமாக பின்பற்றுபவர்கள், தூதரகத்துக்கு நேரில் சென்று விசா பெறும் நடைமுறையில் தளர்வு போன்ற புதுமையான தீர்வுகள் மூலம் இத்தகைய சாதனையை நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1.2 மில்லியன் இந்தியர்கள் அமெரிக்காவுக்கு பயணம் செய்துள்ளனர். அமெரிக்காவுக்கு அதிகமாக வந்து செல்லும் உலக நாட்டினரில் இது குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையாகும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.