மக்கள் வாழ்வில் அரசின் தலையீடு குறைவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை என பிரதமர் நரேந்திர மோடி, துபாயில் நடந்த உலக அரசு உச்சி மாநாட்டில் பேசினார்.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, துபாயில் நடைபெற்று வரும் உலக அரசு உச்சி மாநாடு - 2024ல் கவுரவ விருந்தினராக பங்கேற்றார்.
துபாய் அமீர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் பிரதமர் மோடி பேசியதாவது, "இன்று உலகிற்கு அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கங்கள் தேவை. மக்களின் வாழ்க்கையில் அரசின் தலையீடு குறைந்தபட்சமாக இருப்பதை உறுதி செய்வது அரசாங்கத்தின் பணி என நான் நம்புகிறேன்.
'குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை' என்பதே எனது மிகப்பெரிய கொள்கை. குடிமக்களில் தொழில் முனைவோர் மற்றும் அவர்களின் திறனை வளர்க்கும் சூழலை உருவாக்குவதை நான் எப்போதும் வலியுறுத்துகிறேன். உலகப் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தின் உலகளாவிய மையமாக துபாய் மாறி வருவது ஒரு பெரிய விஷயம்.
சமூக மற்றும் நிதி உள்ளடக்கம் நமது அரசின் முன்னுரிமையாக இருந்து வருகிறது. இதன் காரணமாக, இன்று இந்தியாவில் வங்கிக் கணக்கு இல்லாத 50 கோடிக்கும் அதிகமான மக்கள் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். இது ஃபின்டெக் மற்றும் டிஜிட்டல் பேமெண்ட்களில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு சென்றுள்ளது.
பெண்கள் தலைமையிலான வளர்ச்சியையும் நாங்கள் ஊக்குவித்தோம். கடந்த சில ஆண்டுகளில், இந்திய அரசின் மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. நிர்வாகத்தில் பொதுமக்களின் உணர்வுகளுக்கு நாங்கள் முன்னுரிமை அளித்ததால் மட்டுமே இது சாத்தியமானது." இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
உலக அரசு உச்சி மாநாடு என்பது உலகளாவிய மற்றும் லாப நோக்கற்ற அமைப்பாகும். இது எதிர்கால அரசாங்கங்களை சிறப்பாக வடிவமைப்பது குறித்த விவாதங்களை ஆண்டுதோறும் மாநாடாக நடத்தி வருகிறது. இந்த அமைப்பு கடந்த 2013ம் ஆண்டில் துபாய் அமீர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தலைமையில் நிறுவப்பட்டது.
இதையும் வாசிக்கலாமே...
'ஒரே நாடு ஒரே தேர்தல்' கூட்டாட்சிக்கு எதிரானது... சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம்!
இரட்டை குழந்தைகள், மனைவி கொலை... வெறிபிடித்த கணவன் எடுத்த விபரீத முடிவு!