தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அங்கு பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அரசுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு தொழில்துறை குழுமங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் தொழில் முதலீட்டு மாநாட்டில் கலந்துரையாடினார். அதன் தொடர்ச்சியாக ஸ்பெயின் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்திட வலியுறுத்தினார்.
இதையடுத்து, ஆக்சியானா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ரஃபேல் மாட்டீயோ, மேனுவேல் மாஞ்சோன் வில்டா, ஆகியோர் ஸ்டாலினைச் சந்தித்து பேசினார்கள். இச்சந்திப்பின் போது, “காற்றாலை மின் உற்பத்தியிலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளில் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகிய ஆக்சியோனா நிறுவனத்தின் முதலீட்டிற்கு உகந்த இடமாக தமிழ்நாடு இருக்கும்” என்று முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார்.
இந்த கலந்தாலோசனையின் முடிவில் தமிழ்நாட்டில் இத்துறைகளில் முதலீடுகள் செய்ய ஆக்சியானா நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, பீங்கான் மற்றும் வீட்டுக் கட்டுமான பொருட்களின் உற்பத்தியில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக திகழும் ரோக்கா நிறுவனத்தின் சர்வதேச இயக்குநர் கார்லோஸ் வெலாஸ்குவேஸ் மற்றும் இந்திய இயக்குநர் நிர்மல் குமாரும், முதல்வரை சந்தித்துப் பேசினர்.
இச்சந்திப்பின்போது, ரோக்கா நிறுவனம், தற்போது தமிழ்நாட்டில் பெருந்துறையிலும், ராணிப்பேட்டையிலும் செயல்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் இந்த நிறுவனத்தின் விற்பனையை மேலும் உயர்த்திடவும், சர்வதேச ஏற்றுமதிக்காகவும், இதன் விரிவாக்கத்தையும் புதிய தொழில் அலகுகளையும் தமிழ்நாட்டில் அமைத்திட வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டத்தின் முடிவில், ரோக்கா நிறுவனம் தமிழ்நாட்டில் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக உறுதியளித்துள்ளது . அதன்படி, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை உற்பத்தி செய்யும் புதிய தொழிற்சாலையை நிறுவிடவும், ராணிப்பேட்டையிலும் பெருந்துறையிலும் தற்போது செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் ரோக்கா நிறுவனம் முன்வந்துள்ளது. இதனால் 200 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இதனை அடுத்து, வரும் நாட்களில் மேலும் பல முன்னணி நிறுவனங்களுடன் முதலமைச்சர் முதலீட்டு ஆலோசனைகளை மேற்கொள்ளவிருக்கிறார்.
இதையும் வாசிக்கலாமே...
தினமும் 12 மணி நேர வேலை... வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை: பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு?
ஐஐடி கல்வி நிறுவனத்திற்கு ரூ.110 கோடி நன்கொடை... அள்ளித் தந்த முன்னாள் மாணவரான பிரபல தொழிலதிபர்!