ஜப்பானில் 1650 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய நிர்வாண திருவிழாவில் முதன்முறையாக இந்த வருடம் முதல் பெண்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பானின் இனாஜவா நகருக்கு அருகில் உள்ளது கோனோமியா என்ற ஊர். கோனோமியாவில், ஜப்பானின் பாரம்பரிய மற்றும் முக்கிய மதமாக அறியப்படும் ஷிண்டோ மதத்தின் கோயில் ஒன்று உள்ளது. ஒகினினுஷி எனும் கடவுளுக்காக கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில் வருடந்தோறும் முக்கிய திருவிழாவாக இரண்டு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வரப்படுகிறது. அதில் ஒன்று ஆண்கள் மட்டுமே கலந்துகொள்கிற நிர்வாண திருவிழா. அதாவது ஹடாகா மத்சூரி என்று அழைக்ப்படும் இந்த திருவிழா கடந்த 1650 வருடங்களாக அந்த ஊர் மக்களால் கொண்டாடப்பட்டு வரப்படுகிறது. 10,000க்கும் மேற்பட்ட ஆண்கள் இந்த திருவிழாவில் கலந்துகொண்டு பல்வேறு சடங்குகளை மேற்கொள்வார்கள். இந்த ஆண்டு திருவிழா வரும் பிப்ரவரி மாதம் 22ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்த திருவிழாவில் வரலாற்றில் முதன்முறையாக நிர்வாண திருவிழாவில் பெண்களையும் பங்குபெற அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு பல பெண்கள் அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால், சிலர் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது பாரம்பரியத்தை அழிக்கும் செயல் என்றும் முன்னோர்களை மதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அதேநேரம், இந்த திருவிழாவில் கலந்துகொள்ள பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது 40 பெண்கள் முதற்கட்டமாக திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிப்படுவார்கள். ஆனால், அவர்கள் முழுமையாக உடை அணிந்து, பாரம்பரிய ஹாப்பி கோட் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆண்கள் பங்கு பெறும் சண்டை போட்டியில் இருந்தும் பெண்கள் விலகி இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த திருவிழா பண்டைய காலங்களில் நோய்களை களைய வேண்டி நடத்தப்பட்டதாகவும், ஆண்கள் இடுப்பில் கோவணம் போன்ற உடையை அணிந்து இதில் கலந்துகொள்வார்கள். கைகளில் மூங்கில் கழிகளை ஏந்திக்கொண்டும், ஒருவர் மீது ஒருவர் குளிர்ந்த நீரை ஊற்றிக்கொண்டும் ஊர்வலமாக கோயில் வரை சென்று வழிபாடுவார்கள். இதில், அவர்களுக்குள்ளாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் இந்த நிகழ்வினை வழிநடத்துவார். அவர் திருவிழா அன்று தனது தலையை மொட்டையடித்து, மக்கள் முன் செல்வார். சுற்றியுள்ளவர்கள் அவரை தொடுவார்கள். அதன் மூலம் அவர்களது, கெட்ட சகுனங்கள் மறைந்து, நல்ல காலம் பிறக்கும் என்பது வழிவழியாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.
இதையும் வாசிக்கலாமே...
நாளை தைப்பூசம்... இப்படி வணங்கினால் வாழ்வின் சிக்கல்கள் தீரும்!