அடுத்தடுத்து அத்துமீறும் இலங்கை கடற்படை - மீண்டும் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது


கடலில் மீன் பிடிக்கும் ராமேஸ்வரம் மீனவர்கள்

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடுக்கடலில் தமிழக மீனவர்கள்

வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர் சங்கங்கள் மற்றும் மீனவர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் இதற்கான நிரந்தர தீர்வை ஏற்படுத்த மத்திய,மாநில அரசுகள் முன் வரவில்லை.

ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கைது செய்யப்படும்போதும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு இதுகுறித்து கடிதம் எழுதிவருகிறார். மத்திய அரசும் இலங்கை அரசிடம் பேசி மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்துகிறது. இதுவே தொடர்கதையாக நடந்துவரும் நிலையில் இன்று அதிகாலை தமிழக மீனவர்கள் மீண்டும் கைது செய்யப் பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

படகுகள்

கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே இந்திய கடற்பகுதிக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இன்று அதிகாலையில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் ஆறு பேரையும், அவர்களின் 2 படகுகளோடு சேர்த்து சிறைப்பிடித்துள்ளது என்றும், அவர்களை நெடுந்தீவுக்கு அழைத்துச் சென்றதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கள் வாழ்க்கையை நடத்த பிழைப்புக்காக கடலுக்குச் செல்லும் மீனவர்களை கைது செய்து, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாக இலங்கை கடற்படை அழித்து வருகிறது. இதற்கு மத்திய மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மீனவர்கள் சார்பில் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

x