வடகொரியாவில் ராணுவ தளபதி ஒருவர் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை பிரானா மீன் தொட்டியில் வீசிக் கொல்ல அந்நாட்டின் அதிபர் கிம் ஜான் உத்தரவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரிய அதிபராக உள்ளார் கிம் ஜாங்-உன். உலகில் இருந்து வடகொரியா முற்றிலுமாக தனித்து இருக்கும் நிலையில், மர்மங்கள் நிறைந்த நபராகவே கிம் ஜாங்-உன் அறியப்படுகிறார். பிடிக்காத நபர்களை உரிய விசாரணையும் இன்றி கொல்வது, நாட்டு மக்களை மிக மோசமான நிலையில் வைத்திருப்பது என அவர் மீதான விமர்சனம் அதிகம். இதற்கிடையே வடகொரியாவில் நடந்த மிக மோசமான கொலை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டின் ஜெனரல் ஒருவரைக் கொல்ல உத்தரவிட்டுள்ளார். அதிலும் அந்த ஜெனரல் மிக மோசமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். அதாவது கிம் ஜான் உத்தரவின்படி அந்த நபர் கொடூரமான பிரானா மீன்கள் இருக்கும் தொட்டியில் வீசி கொல்லப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
அந்த ஜெனரல் கிம்முக்கு எதிராகச் சதி செய்ததாகவும் வடகொரியாவைக் கைப்பற்ற முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதற்காகவே அந்த ஜெனரல் கொல்லப்பட்டுள்ளார். வடகொரியாவில் கிம்முக்கு எதிராகச் சதி செய்வோர் இதுபோல வினோதமான முறையில் கொல்லப்படுவது தொடர்கதையாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக ராட்சத மீன் தொட்டி ஒன்று ரியாங்சாங்கில் உள்ள கிம் இல்லத்தில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அந்த வட கொரிய ஜெனரல் மீன் தொட்டியில் வீசப்படுவதற்கு முன்பு அவரது கைகள் மற்றும் உடல்கள் வெட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் அவர் பிரானா தாக்குதலால் உயிரிழந்தாரா அல்லது காயங்களால் இறந்தாரா அல்லது நீரில் மூழ்கி இறந்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. தனக்கு எதிராக துரோகம் செய்வோரைக் கொல்லவே இந்த பிரானாக்களை கிம் ஜான் பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்ததாகவும் கூறப்படுகிறது.
1977ம் ஆண்டு வெளியான ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான 'தி ஸ்பை ஹூ லவ்ட் மீ' என்ற படத்தை கிம் சமீபத்தில் பார்த்ததாகவும் அதன் பிறகே அந்தப் படத்தில் வருவதைப் போல இப்படி பிரானாவை வைத்து கொலை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்த ராணுவ ஜெனரலை சேர்த்து இதுவரை குறைந்தது 16 பேரின் உயிரை கிம் ஜான் இந்த முறையில் பறித்தாக கூறப்படுகிறது. முன்னதாக, வட கொரியாவின் ராணுவத் தளபதி மற்றும் வட கொரியாவின் மத்திய வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஆகிய இருவரும் இதேபோல கொல்லப்பட்டனர்.
மேலும், கிம் எப்போது எந்த முடிவை எடுப்பார் என்றே தெரியாது. வடகொரியா சர்வாதிகார நாடு என்பதால் அவர் சொல்வது தான் இறுதி. அதை எதிர்த்து நம்மால் ஒன்னுமே செய்ய முடியாது. இதனால் அவருக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் நபர்கள் கூட திடீரென கொல்லப்பட்ட வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாகவே வடகொரியாவில் மக்கள் மட்டுமின்றி உயர்மட்ட அதிகாரிகளும் கூட அச்சத்திலேயே இருக்க வேண்டி இருக்கிறது.
இது தொடர்பாகப் பிரிட்டன் உளவுத் துறை கூறுகையில், "பிரானாவை வைத்துக் கொன்றுள்ளது கிம்மின் டிரேட் மார்க் ஸ்டைல். அவர் மற்றவர்களை அச்சுறுத்தி, அதன் மூலம் தனது செல்வாக்கைத் தக்க வைப்பதே ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துகிறார். பிரானா மூலம் ஒருவரைக் கொல்ல முடியுமா என்பது குறித்தெல்லாம் அவருக்குக் கவலை இல்லை.. இந்த செய்தியே அனைவருக்கும் அச்சத்தைத் தரும். அதுதான் கிம்முக்கும் தேவை" என்று அவர் தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாமே...