வங்காள தேசத்தில் பொதுத்தேர்தல் நடந்து, வாக்குகள் எண்ணப்பட்டு ஷேக் ஹசீனா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.
சமீபத்தில் வங்காள தேசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியான அவாமி கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாகக் குற்றம் சாட்டி முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. ஜதியா கட்சி, வங்காள தேசம் கல்யாண் கட்சி போன்ற கட்சிகள் போட்டியிட்டன.
பொதுத் தேர்தல் நடைபெற்ற 299 தொகுதிகளில் 223 தொகுதிகளைக் கைப்பற்றி ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்காள தேசத்தின் பிரதமராக ஷேக் ஹசீனா 4வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விரைவில் ஷேக் ஹசீனாவின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் தேர்தலைப் புறக்கணித்த பிரதான எதிர்க்கட்சியான வங்காள தேச தேசியவாத கட்சி, இந்த தேர்தலை டம்மி தேர்தல் என்றும், அதனை ரத்து செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. மேலும் பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக பதவி விலக வேண்டும், மீண்டும் நியாயமான பொதுத்தேர்தலை நடத்தவேண்டும் என்றும் கூறியுள்ளது.
இதனை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப் போவதாகவும், பொதுமக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக, மக்களைச் சந்திக்கப் போவதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது. இதனால் அந்த நாட்டில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.