போலியோ சொட்டுமருந்து முகாம் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல்... 5 போலீஸார் பலி!


தாக்குதல் நடந்த இடம்

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் போலியோ சொட்டுமருந்து முகாம் மீது மர்ம நபர்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 5 போலீஸார் இறந்தனர்.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துன்குவா மாகாணத்தில் கடந்த மாதம் காவல் நிலையத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 23 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் காயம் அடைந்த பலர் அருகிலுள்ள டிஐ கான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பலத்த பாதுகாப்புடன் சொட்டுமருந்து முகாம்

இந்த நிலையில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக இன்று காலையில் மருத்துவக் குழுக்கள் சென்றுள்ளன. அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக அதிகளவில் போலீஸாரும் உடன் சென்றனர். அப்போது அவர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து மர்ம நபர்கள் திடீரென குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கடந்த மாதம் தாக்குதல் நடந்த இடம்

இந்த தாக்குதலில் 5 போலீஸார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து போலீஸார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியை சுற்றிலும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதுவரை இந்த குண்டுவெடிப்புக்கு எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை என தெரியவந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x