தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம்... இப்போது சொல்கிறார் இலங்கை அதிபர்!


ரணில் விக்கிரமசிங்க

இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் ரீதியான தன்னாட்சி அதிகாரம் வழங்கும், 13வது அரசியலமைப்பு திருத்தத்துக்கு , அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்று வந்த இனப் பிரச்சினைக்கு தீர்வு காண 1987ல் நடைபெற்ற இந்தியா - இலங்கை இரு தரப்பு பேச்சு வார்த்தையின் முடிவில் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, முன்னாள் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ஆகியோர் இணைந்து, இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தில் 13வது திருத்தம் செய்வதற்கான உடன்பாட்டை உருவாக்கினர்.

அரசியலமைப்பு சட்டம் 13ஏ தமிழ் சமூகத்திற்கு அதிகாரப் பகிர்வு வழங்குகிறது. இந்த திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதன் வாயிலாக தமிழர்களுக்கான சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்று நம்பப்படுகிறது. அதனால் இந்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கையின் பெரும்பாலான தமிழ் கட்சிகள் கோரி வருகின்றன. இந்தியாவும் அவர்களின் குரலுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

இலங்கை தமிழர்கள்

இந்நிலையில், இதற்கு அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்கவும் தற்போது ஆதரவு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் ரணில் விக்ரமசிங்க 13வது சட்ட திருத்தம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தினார். "13வது சட்டத் திருத்தத்தின் விதிகளை நாம் ஆராய்ந்தால், வலுவான உள்ளூர் பொருளாதாரத்தை நிறுவுவதற்கு போதுமான அதிகாரம் உள்ளது. அந்த விவகாரங்களில் தலையிட மாட்டோம் என உறுதியளிக்கிறோம்.

அதற்கான முன் முயற்சிகளை நீங்கள் எடுக்க வேண்டும் என நான் ஊக்குவிக்கிறேன். தற்போது, மேற்கு மாகாணம் சுதந்திரமான செலவினங்களைச் செய்யக்கூடிய ஒரே பிராந்தியமாக உள்ளது.

தமிழர்கள்

மற்றவை நிதி ரீதியாக அதைச் சார்ந்திருக்கின்றன. இதனால் இந்த விவகாரத்தில் மறுபரிசீலனை அவசியமாகிறது. 13வது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களை பயன்படுத்துவதன் வாயிலாக ஒவ்வொரு மாகாணமும் வளர்ச்சிக்கான பாதையை பட்டியலிட முடியும். இந்த அதிகாரங்களை செயல்படுத்த வேண்டிய நேரம் இது" என்று அவர் தெரிவித்தார்.

13 வது சட்டத்திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டால்தான் தமிழர் பகுதிகளில் உண்மையான தன்னாட்சி அதிகாரம் உள்ள அரசு நிர்வாகம் நடைபெறும் என்பதால் ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சுக்கு தமிழர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

x