புதுடெல்லி: வான்வழித்தாக்குதல், படுகொலைகள், படைதிரட்டல் உள்ளிட்ட சம்பவங்கள் ஒரு தாக்குதலுக்கு களம் அமைத்துள்ளதால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் படுகொலைக்கு பதிலடி கொடுக்கப்படும் என்ற ஈரானின் எச்சரிக்கைக்கு மத்தியில் அமெரிக்க ராணுவ அதிகாரி மைக்கேல் குரில்லா சனிக்கிழமை மத்திய கிழக்குக்கு சென்றுள்ளார்.
தற்போதைய போர் பதற்றங்களுக்கு முன்பாகவே இந்தப் பயணம் திட்டமிடப்பட்டிருந்தாலும், ஏப்ரலில் இஸ்ரேலை பாதுக்காத்த அதன் கூட்டாளியான அமெரிக்காவின், சர்வதேச மற்றும் பிராந்திய ஆதரவினை கோரும் ஒரு நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா ஈரான் சென்றார். அங்கு அவர் ஜூலை 31-ல் தலைநகர் டெஹ்ரானில் உள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம், மத்திய கிழக்கின் போர் பதற்றத்துக்கு அடித்தளமிட்டுள்ளது.
பதிலடி கொடுக்கப்படும்: இஸ்மாயிலின் படுக்கை அறையில் ஏற்கெனவே குண்டு வைக்கப்பட்டிருந்ததாக முன்பு சொல்லப்பட்ட நிலையில், தற்போது, 7 கிலோ எடையுள்ள குறுகிய தூரம் சென்று தாக்கும் ஏவுகணை மூலம் இஸ்மாயில் மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. பழிவாங்கும் நடவடிக்கை சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான விதத்தில் மிகக் கடுமையாக மேற்கொள்ளப்படும். இஸ்மாயில் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க அரசு ஆதரவு அளிப்பது குற்றச்செயல் என ஈரான் ராணுவம் சனிக்கிழமைத் தெரிவித்திருந்தது.
ஒருங்கிணைந்த தாக்குதல்: இஸ்மாயில் ஹனியாவின் படுகொலையில் இஸ்ரேல் தனது பங்கினை உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ இல்லை. இந்தச் சம்பவம், பதிலடி தாக்குதலுக்கு தூண்டியுள்ளது. விருந்தினராக வந்த இஸ்மாயிலை படுகொலை செய்ததற்காக, இஸ்ரேல் கடும் தண்டனை அனுபவிக்கும் என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா எச்சரிக்கை விடுத்திருந்தார். ‘‘இஸ்ரேல் அனைவரையும் சண்டைக்கு இழுக்கிறது. எனவே இஸ்ரேல் மீது ஒருங்கிணைந்த தாக்குதல் நடத்தப்படலாம்’’ என ஹிஸ்புல்லா தலைவர் ஹாசன் நஸ்ரல்லாவும் சூசகமாக தெரிவித்திருந்தார். காசாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஏமனில் உள்ள ஹவுதி தீவிரவாதிகளும் இஸ்ரேலுக்கு எதிரான ஒருங்கிணைந்த தாக்குதலில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க போர்கப்பல் நிலை நிறுத்தம்: இதனிடையே இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் விரைவில் நடக்கலாம் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த அச்சுறுத்தல், மத்திய கிழக்கு பகுதியில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்த அமெரிக்காவைத் தூண்டியுள்ளது. இதையடுத்து அமெரிக்க கடற்படையில் உள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பலை, ஓமன் வளைகுடா பகுதிக்கு செல்ல அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
ஓமன் வளைகுடா பகுதியில் ஏற்கெனவே யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் விமானம் தாங்கி போர்க்கப்பல் உட்பட இதர போர்க்கப்பல்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும், போர் விமானங்கள் படைப்பிரிவு, ஏவுகணைகள் வீசும் போர்க்கப்பல்கள் ஆகியவற்றையும் மத்திய கிழக்கு மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிக்கு செல்ல அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் உத்தரவிட்டுள்ளது. காசா மீதான தாக்குதல் தொடங்கியதில் இருந்து, இஸ்ரேலை பாதுகாக்க, அமெரிக்க படைகள் தற்போது மிகப் பெரியளவில் அனுப்பப்படுகின்றன.
இந்தியர்களுக்கு அறிவுரை: ஈரான் தாக்குதல் நடத்தினால், அதை எதிர்கொள்ள இஸ்ரேல் ராணுவமும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் அமைத்துள்ள பதுங்குக் குழிகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படியும், இஸ்ரேல் அரசு அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேலில் உள்ள இந்தியர்களும் விழிப்புடன் இருந்து பாதுகாப்புவழிமுறைகளை பின்பற்றும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.