இந்தியாவுடன் போரிட உலக வங்கியிடம் கடன் கேட்டதா பாகிஸ்தான்? - அரசின் எக்ஸ் பதிவு சர்ச்சை


புதுடெல்லி: இந்தியா - பாகிஸ்தான் மோதல் அதிகரித்து வரும் நிலையில், உலக வங்கியிடம் பாகிஸ்தான் கூடுதல் கடன் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதற்கு பாகிஸ்தான் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்ததன் தொடர்ச்சியாக, வியாழக்கிழமை இரவும் பாகிஸ்தானின் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வெற்றிகரமாக வீழ்த்தியது இந்திய பாதுகாப்புப் படை.

ஜம்மு விமான நிலையம், பஞ்சாபின் பதன்கோட் விமான நிலையம், ராஜஸ்தானின் நல், பலோடி, உத்தர்லை ஆகிய 3 இடங்களில் உள்ள விமானப்படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன்கள் வியாழக்கிழமை இரவு திடீர் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. இந்திய விமானப் படை அனைத்து ட்ரோன்களையும் நடுவானில் சுட்டு வீழ்த்தியது.

இந்த நிலையில், பாகிஸ்தான் உலக வங்கியிடம் கூடுதல் கடன் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானின் பொருளாதார விவகாரப் பிரிவு உலக வங்கியை டேக் செய்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “எதிரிகளால் ஏற்பட்டுள்ள பேரிழப்பின் காரணமாக, சர்வதேச கூட்டாளிகளிடம் கூடுதல் கடனை பாகிஸ்தான் அரசு கோருகிறது.

அதிகரித்து வரும் போர் மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்தியில், சர்வதேச கூட்டாளிகள் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாடு உறுதியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, பாகிஸ்தானின் பொருளாதார விவகாரப் பிரிவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்தத் தகவல் போலி என்றும் பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது ஹேக்கர்களின் வேலை என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தியா - பாக். போர் பதற்றம் பின்னணி:

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம்.

அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து வியாழக்கிழமை பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்தது. அதன் தொடர்ச்சியாக இரவிலும் பாகிஸ்தானின் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வெற்றிகரமாக வீழ்த்தியது இந்திய பாதுகாப்புப் படை.

எல்லை மாநிலங்களில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது. ஜம்மு, ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள எல்லை கிராமங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு அமலாகியுள்ளது. இதுபோல், தலைநகர் டெல்லியிலும் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

x