திருப்பத்தூர் குரிசிலாப்பட்டு அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் சாலை மறியல்


திருப்பத்தூர்: குரிசிலாப்பட்டு அருகே இளம் பெண் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த இருணாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (32) இவர், குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆய்வக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சிலம்பரசி (27). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சீனிவாசன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிலம்பரசி மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது

காவல் துறையினர் விசாரணை: இது குறித்து தகவல் அறிந்த குரிசிலாப்பட்டு காவல்துறை யினர் சிலம்பரசியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரணத்தில் சந்தேகம்: இந்நிலையில் சிலம்பரசியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது மரணத் துக்கு சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி சிலம்பரசியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் இருணாப்பட்டு பகுதியில் நேற்றிரவு 7 மணியள வில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த குரிசிலாப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

x