புதுச்சேரி: ரசாயனம் கலந்த உணவு பொருட்கள் புதுச்சேரியில் விற்பனை செய்வதை தடுக்க முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''அத்தியாவசிய உணவு பொருட்களான மீன், இறைச்சி, பால் மற்றும் பழம் வகைகளில் ரசாயன பொருட்கள் கலக்கப்படுவதால் மக்களின் நலன் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. வெளி மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அந்த மீன்கள் பத்து நாட்களுக்கு மேலாக கெடாமல் இருப்பதற்காக பார்மலின் என்ற ரசாயன பொருள் கலக்கப்படுகிறது.
அதே போன்று மாம்பழம், வாழைப்பழம் உள்ளிட்ட பல்வேறு பழ வகைகளில் உடனடியாக ஒரே நேரத்தில் பழக்க வைக்கவும், பழுத்த பழங்கள் கெடாமல் இருக்கவும், சுவையை அதிகரிக்கவும் எத்தஃபோன் மற்றும் எத்திலீன் டை குளோரைடு போன்ற ரசயான பொருட்கள் கலக்கப்படுகின்றன. ஆப்பிள் வெகு நாட்கள் கெடாமல் இருப்பதற்கு பழத்தின் மீது மெழுகு கலக்கப்படுகின்றது. இதுபோன்று எத்தஃபோன் மற்றும் எத்திலீன் ஆகிய ரசாயன பொருட்கள் பழங்கள் மூலம் மனித உடலுக்கு செல்லும் போது மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பல்வேறு நோய்கள் உருவாகிறது.
தினசரி அருந்தும் பாலில் பால் கெடாமல் இருப்பதற்காகவும், பாலின் அடர்த்தி அதிக அளவில் இருப்பதற்காகவும், பல ரசாயன பொருட்கள் கலக்கப்படுகின்றன. இவ்வாறு கலக்கப்படும் ரசாயன பொருட்களால் குழந்தைகளுக்கு வயிற்று போக்கு, வாந்தி, தலைவலி, பெரியவர்களுக்கு சிறுநீரக கோளாறுகளும் மெல்ல மெல்ல கண்ணுக்கு தெரியாத உடல் உறுப்புகள் வீணாகி மரணம் கூட ஏற்படலாம் என நச்சு இயல் துறை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது புதுச்சேரி அரசில் வேளாண்துறை அமைச்சராக உள்ள தேனீ.ஜெயக்குமார் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலில் மண்புழு அறைத்து கலக்கப்படுவதாக சட்டப்பேரவையிலேயே பகிரங்கமாக குற்றம் சுமத்தினார்.
இதுபோன்ற கலப்படத்தை ஒரு சிலர் தங்களது பேராசையினால் மனித உயிர்களை பற்றி கவலைப்படாமல் செய்கின்றனர். இந்த தவறுகளை ஆய்வு செய்வதற்கோ அல்லது பரிசோதனை செய்வதற்கோ புதுச்சேரி அரசில் சம்பந்தப்பட்ட துறைகளில் ஒன்றிரண்டு அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். அந்த அதிகாரிகளும் வாங்கும் ஊதியத்துக்கு அலுவலகத்திலேயே இருந்துவிட்டு எங்கும் பரிசோதனை நடத்தாமல் உள்ளனர். குறிப்பாக தற்போது பிராய்லர் கோழி இறைச்சி மூலம் செய்யப்படும் பாஸ்ட் புட் என்ற துரித உணவுகளை உண்ணுவதால் கடந்த 2 தினங்களில் மட்டும் பலர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலர் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் உள்ளிருப்பு நோயாளிகளாகவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மக்களுடைய உடல் நலனுக்கு பாதிப்பு இல்லாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். ஆனால் அந்த கடமையில் இருந்து சம்பந்தபட்ட அதிகாரிகள் முழுமையாக தவறியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சுகாதாரத்துறையை தன் பொறுப்பில் வைத்துள்ள முதல்வர் இது சம்பந்தமாக உரிய தடுப்பு நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி ரசாயனம் கலந்த உணவு பொருட்கள் புதுச்சேரியில் விற்பனை செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.