பெண்ணின் நுரையீரலில் சிக்கிய மூக்குத்தி திருகாணி: அறுவை சிகிச்சையின்றி அகற்றிய சேலம் காவேரி மருத்துவமனை


சேலம்: பெண்ணின் நுரையீரலில் சிக்கிய மூக்குத்தி திருகாணியை, காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்றி அகற்றியுள்ளனர்.

55 வயது பெண்ணின் நுரையீரலுக்குள் சென்று 10 மாதங்களுக்கு மேல் தங்கி விட்ட மூக்குத்தி திருகாணியை அறுவை சிகிச்சை ஏதுமின்றி நவீன மருத்துவ படம் பிடிப்பு நுட்பங்கள் மற்றும் துல்லியமான மூச்சுக்குழாய் ஊடுருவி சிகிச்சை மூலம், வெற்றிகரமாக சேலம் காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

இருமல், ரத்தம் கலந்த சளியுடன், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு ஆரம்பகட்ட சி.டி ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவற்றின் மூலம் நுரையீரலில் தொற்று மற்றும் ரத்த உறைவு இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் மூச்சுக் குழாய் ஊடுருவி சிகிச்சை மேற்கொண்டனர். மேலும், சி.டி நுரையீரல் ஆஞ்சியோ கிராம் பரிசோதனை செய்தனர். அப்போது ஒரு உலோகப் பொருள் உள்ளே இருப்பது உறுதியானது.

தொடர்ந்து சி-ஆர்ம் படம் பிடிப்பு மற்றும் துல்லிய மூச்சுக்குழாய் ஊடுருவி மூலம், மருத்துவக் குழுவினர் அது மூக்குத்தி திருகாணி என்பதை உறுதி செய்து, அறுவை சிகிச்சை இல்லாமல் ஊருருவியை வைத்தே திருகாணியை வெற்றிகரமாக வெளியில் எடுத்தனர். சிகிச்சை முறைகளை வழி நடத்திய நுரையீரல் மருத்துவ நிபுணர் டாக்டர் எம்.வி.ராமச்சந்திரன் குழுவினரை, காவேரி மருத்துவமனையின் இயக்குநர் செல்வம் உள்ளிட்டோர் பாராட்டினர்.

x