சேலம்: ஓடும் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்த மகனை, அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி தந்தை மீட்டார்.
பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (50). இவரது மகன் நித்தீஷ் (22). அருண்குமார் சென்னையில் உள்ள ஜவுளி கடையில் பணி புரிகிறார். சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள பேக்கரியில் நித்தீஷ் வேலை பார்த்து வருகிறார். சென்னையில் உள்ள ஜவுளிக் கடையில் மகனை வேலைக்கு சேர்த்து விட சேலம் வந்த அருண்குமார், நேற்று முன் தினம் இரவு நித்தீஷை அழைத்துக் கொண்டு சேலம்-சென்னை எழும்பூர் ரயிலில் புறப்பட்டார். முன்பதிவில்லா பெட்டியில் இருவரும் பயணித்தனர்.
அயோத்தியாப்பட்டணம் -மின்னாம்பள்ளி இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது, படிக்கட்டில் நின்றிருந்த நித்தீஷ் தவறி கீழே விழுந்தார். தன் கண் முன்பே மகன் ரயிலில் இருந்து தவறி விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அருண்குமார், உடனடியாக அபாயச் சங்கலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். பயணிகள் கீழே இறங்கி சென்று நித்தீஷை தேடியபோது, தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் தலையில் பலத்த காயத்துடன் நித்தீஷ் கிடந்தார். அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சேலம் ரயில்வே போலீஸார் விசாரிக்கின்றனர்.