கன்னியாகுமரி: நாகர்கோவிலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நகரமாக மார்த்தாண்டம் திகழ்கிறது. இங்கு போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இரண்டரை கிலோ மீட்டர் நீளத்துக்கு ஆசியாவிலேயே நீளமான இரும்பு மேம்பாலம் கட்டப்பட்டு கடந்த 2018 முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் பேருந்துகள் மார்த்தாண்டம் காந்தி மைதானம் சந்திப்பில் இந்த மேம் பாலத்தில் நின்று செல்கின்றன. ஏராளமான பயணிகள் இங்கு பேருந்துக்காக காத்திருப்பார்கள் என்பதால் பயணிகள் நிற்பதற்கு வசதியாக நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்த நிழற்குடை கடந்த இரு ஆண்டுகளாக தாங்கு கம்பிகள் வளைந்து, சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இது போலவே மேம்பாலத்தின் எதிர்பகுதியில் உள்ள நிழற்குடையும் அபாய நிலையில் உள்ளது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டதற்கு, ‘மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நிழற்குடை அமைக்க தாங்கள் திட்டமிடவில்லை என தேசிய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது. பல கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்ட நிலையில் பயணிகளி ன் வசதிகளை புறக்கணித்து திட்டமிடப்பட்டது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது.
திட்டமிடல் இல்லாததால் குறிப்பிட்ட பகுதியில் தரமின்றி அமைக்கப்பட்ட நிழற்குடை எப்போதும் சரிந்து விழுந்து பேராபத்தை உருவாக்கலாம் என்ற சூழல் உள்ளது. இதனால் நிழற்குடையின் கீழ் பயணிகள் நிற்கவே அச்சப் படுகின்றனர். பேருந்துக்காக நிற்கும் பெண்கள், முதியவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.
மாற்றுத்திறனாளிகள், உடல் பலவீனம் உடையவர்கள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் மழை, வெயில் மற்றும் இரவு நேரங்களில் பாதுகாப்பாக நிற்க பயன்படும் வகையில் நிழற்குடை அமைக்கப்படாதது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமான பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நலன்கருதி அவர்களுக்கு பயன்படும் வகையில் பாதுகாப்பான நிழற்குடை அமைத்திட வேண்டும் என பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.