ஊட்டி: மாநாட்டில் கலந்துகொள்ள கூடாது என அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர்களின் வீட்டு கதவை நள்ளிரவில் தட்டி கூட்டத்தில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது என மிரட்டல் விடுத்துள்ளனர். என துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி பேசியுள்ளார்
ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் இன்றும், நாளையும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடக்கிறது. மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கிறார்.
இதற்கிடையே, துணைவேந்தர்கள் மாநாட்டை அறிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து பலரும் போராட்டங்களை நடத்தினர். இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஊட்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ரவி இன்று நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழக அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளனர். அதேபோல பல்வேறு தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் இம்மாநாட்டை புறக்கணித்துள்ளனர் என சொல்லப்படுகிறது. இதனால் ஆளுநர் தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது.
41 பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 9 துணைவேந்தர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். அந்த 9 பேரும் மத்திய அரசு மற்றும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் மாநாட்டில் பங்கேற்க திருநெல்வேலியில் இருந்து உதகைக்குச் சென்ற நிலையில் தனது முடிவை மாற்றி துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாநாட்டில் ஆளுநர் ரவி பேசுகையில், "மாநாட்டில் கலந்துகொள்ள கூடாது என அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உதகைக்கு வந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர். அதனால்தான் உதகைக்கு வந்தும் பலர் மாநாட்டில் பங்கேற்காமல் திரும்பிச் சென்றனர்.
கல்வியின் வளர்ச்சிக்காக நடத்தப்படும் இந்த மாநாட்டில் மாநில அரசின் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை. துணைவேந்தர்களின் வீட்டு கதவை நள்ளிரவில் தட்டி கூட்டத்தில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது என மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபோன்று ஒரு அசாதாரண சூழல் முன்னெப்போதும் ஏற்பட்டது இல்லை. ஆட்சியில் இருப்பவர்களுக்கு இந்த மாநாடு நடப்பது பிடிக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.