சென்னை: யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு 500 மாணவர்கள் தங்கி பயிலும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு பயிற்சி மையம் ரூ.40 கோடியில் சென்னையில் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களை பாராட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பேசியதாவது: தமிழக மாணவர்களின் திறனை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதுதான் ‘நான் முதல்வன்’ திட்டம். அந்தத் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளின் விளைவாக, தற்போது வெளியான அகில இந்திய குடிமைப் பணி தேர்வு முடிவுகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அதாவது, 2016ம் ஆண்டுக்கு பின்பு யுபிஎஸ்சி குடிமைப் பணி தேர்வுகளில் தேர்வாகும் தமிழக மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது. 2021ல் வெறும் 27 மாணவர்கள் மட்டும்தான் தேர்வாகினர்.
இவற்றை கவனத்தில் வைத்து நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. யுபிஎஸ்சி குடிமைப் பணி தேர்வுக்கு தயாராகும் ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாதம் ரூ.7,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கினோம். மேலும், முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்கு எழுதும் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கினோம். மேலும், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் மூலமாக இந்த மாணவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
அதன் பயனாக இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 57 மாணவர்கள் அகில இந்தியப் பணிகளுக்கு தேர்வாகி யுள்ளனர். இவர்களில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களாவர். தொடர்ந்து தேர்வில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்த வேண்டும். அதற்காக சென்னையில் செனாய் நகர் பகுதியில் 500 மாணவர்கள் தங்கிப் பயிலும் வகையில், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஒரு பயிற்சி மையம் ரூ.40 கோடியில் அமைக்கப்படும். அதனுடன், இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் நாளை (ஏப்ரல் 26) நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.