தஞ்சை காவல்நிலையம் முன்பு தற்கொலை: இளம்பெண் உடலை 16 நாட்களுக்கு பிறகு பெற்றுக் கொண்ட உறவினர்கள்


தஞ்சாவூர்: நடுக்காவேரி காவல் நிலையம் முன்பு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்ணின் உடலை 16 நாட்களுக்கு பிறகு நேற்று அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.

நடுக்காவேரி அரசமரத்தடி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (32). இவரை ஏப்.8-ம் தேதி வழக்கு ஒன்றில் போலீஸார் கைது செய்தனர். அப்போது, இதைக் கண்டித்து தினேஷின் சகோதரிகள் மேனகா (31), கீர்த்திகா (29) ஆகியோர் காவல் நிலையம் முன்பு விஷம் குடித்தனர். இதையடுத்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில், ஏப்.9-ம் தேதி கீர்த்திகா உயிரிழந்தார்.

இதையடுத்து, கீர்த்திகாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நடுக்காவேரி காவல் ஆய்வாளர் சர்மிளா மீது எஸ்சி, எஸ்டி சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்விகாரத்தில் காவல் ஆய்வாளர் சர்மிளா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும், அந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றிய போலீஸார், வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டனர்.

ஆனால், காவல் ஆய்வாளர் சர்மிளா மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும். தினேஷ் மீது நிலுவையில் உள்ள 13 வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும். வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உடற்கூராய்வு செய்யப்பட்ட கீர்த்திகாவின் உடலை வாங்க மறுத்துவிட்டனர். இதனால், கீர்த்திகாவின் உடல் 16 நாட்களாக மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்திலேயே வைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, கீர்த்திகாவின் மரணம் தொடர்பாக, முறையான விசாரணை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதலில் உடலை வாங்கி அக்கம் செய்யுமாறும், இல்லையெனில் போலீஸார் முறைப்படி அடக்கம் செய்து விடுவர் என தெரிவித்தது.

இதையடுத்து, கீர்த்திகாவின் குடும்பத்தினரிடம் மாவட்ட நிர்வாம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை ஏற்று 16 நாட்களுக்குப் பிறகு கீர்த்திகாவின் உடலை அவரது குடும்பத்தினர் நேற்று பெற்றுக்கொண்டனர். கீர்த்திகாவின் உறவினர்கள் தொடுத்த வழக்கு மீண்டும் ஏப்.28-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

x