பழநியில் பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கும் சிறுவர் பூங்காக்கள்: பொதுமக்கள் அவதி


படம்:நா.தங்கரத்தினம்

திண்டுக்கல்: பழநி நகராட்சி சிறுவர் பூங்கா பராமரிப்பின்றி புதர்மண்டி கிடப்பதால் சிறுவர், சிறுமியர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பழநி நகராட்சி சார்பில் மொத்தம் 12 சிறுவர் பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சறுக்கு, ஊஞ்சல் உட்பட பல்வேறு விளையாட்டு உபகரணங்க ளுடன் அமைக்கப்பட்ட இந்த சிறுவர் பூங்காக்களை அந்தந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் பயன்படுத்தி வந்தனர். இதில் பெரும்பாலான பூங்காக்கள் போதிய பராமரிப்பு இல்லாததால் முட்புதர்கள் வளர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது. பூங்காவில் உள்ள விளையாட்டு தளவாடங்கள் துருப்பிடித்தும், ஆபத்தான நிலையிலும் உள்ளன.

இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. பூங்காவை பயன்படுத்த முடியாமல் சிறுவர், சிறுமியர் சிரமப்பட்டு வருகின்ற னர். பழநி உழவர் சந்தை மற்றும் பழைய தபால் நிலைய சாலையில் உள்ள பூங்காக்களில் நகராட்சி சார்பில் அப்பகுதியில் சேகரிக்கும் குப்பையை மொத்தமாக கொட்டி வைத்து தரம் பிரிக்கும் பணி நடைபெறுகிறது.

இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரப்பும் இடமாக மாறியுள்ளது. பூங்காக்களை முறையாக பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x