திண்டுக்கல்: காந்தி கிராமம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும், கஸ்தூரி பாய் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவரும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஏழை தாய்மார்களுக்கு பிரசவ சேவை செய்த மருத்துவர் கவுசல்யா தேவி (95) நேற்று வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள கஸ்தூரிபா மருத்துவமனையில் 1969ம் ஆண்டு முதல் மகப்பேறு நல மருத்துவராக பணி புரிந்தவர் கவுசல்யாதேவி. காந்தி கிராம அறக்கட்டளை வாழ் நாள் நிர்வாக அறங்காவலராகவும் இருந்துள்ளார். காந்தியவாதியான இவர், எளிமையான வாழ்க்கையை இறுதி வரை வாழ்ந்தார். சுற்றுப் புற கிராம மக்களின் நம்பிக்கையை பெற்றதால், இவரிடம் பிரசவம் பார்க்க வந்தவர்கள் அதிகம். குறைந்தது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பிரசவங்களையாவது பார்த்திருப்பார்.
குழந்தை பிறப்பு, குடும்பக் கட்டுப்பாடு, குழந்தை பராமரிப்புகளில் சிறந்து விளங்கிய இந்த மருத்துவமனையில் குழந்தை தத்தெடுப்பு மையமும் உள்ளது. கஸ்தூரிபா மருத்துவமனையின் சேவையை சுற்றுப்புற கிராம மக்களுக்கு விரிவுபடுத்தி கிராம மக்களுக்கு எளிதில் மருத்துவ சேவை கிடைக்க பாடுபட்டார்.
குடும்ப கட்டுப்பாட்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக 1979ம் ஆண்டு கஸ்தூரிபா மருத்துவமனைக்கு இந்திய அளவில் விருதுகள் கிடைக்க காரணமாக இருந்துள்ளார். மருத்துவ சேவையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதால் திருமணமே செய்துகொள்ளவில்லை.
அவரது சேவையை பாராட்டி காந்தி கிராம பல்கலை அம்மையாருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. மேலும் தன்னார்வ அமைப்புகள் இவரது சேவைகளை பாராட்டி பல விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளன. மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்த இவர், தனது 95-வது வயதில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். காந்தி கிராம பல்கலைக் கழக உயர் அலுவலர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
திண்டுக்கல் எம்.பி. ஆர்.சச்சிதானந்தம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், எளிய வாழ்வை விரும்பி வாழ்ந்தவர். பணம், புகழுக்காக இல்லாமல் சேவைக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்’ என தெரிவித்துள்ளார்.