மதுரையில் 16.5 எம்எல்டி கழிவுநீர் மட்டுமே சுத்திகரிப்பு; எஞ்சிய 107.5 எம்எல்டி எங்கே ?


மதுரை: மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு தினமும் 156 எம்எல்டி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த வார்டுகளில் மக்கள் வெளியேற்றும் கழிவுநீர் பாதாள சாக்கடை குழாய்கள் மூலம் வெள்ளக்கல், சக்கிமங்கலம் ஆகிய இரு இடங்களில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு பம்பிங் செய்யப்படுகிறது. அங்கு கழிவுநீர் சுத்திகரித்து வெளியேற்றப்படுகிறது.

மாநகராட்சி பழைய 72 வார்டுகளில் பெரும்பாலானவற்றில் பாதாள சாக்கடைகள் சிதிலமடைந்தும், உடைந்தும் பராமரிப்பு இல்லாமலும் உள்ளன. அதனால், தெருக்கள், சாலைகளில் அடிக்கடி பாதாளசாக்கடை உடைந்து கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாதாள சாக்கடையின் பழைய வரைபடம் எதுவும் மாநகராட்சி வசம் இல்லாததால், அவற்றை உடனுக்குடன் மாநகராட்சியால் சீரமைக்க முடியவில்லை.

இந்நிலையில் நீண்ட காலத்துக்கு முன் போடப்பட்ட பழைய 72 வார்டுகளில் உள்ள பாதாள சாக்கடைகள் சர்வே செய்து, அதனை மறுசீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. நகர் பகுதியில் பந்தல்குடி கால்வாயில் வரும் கழிவுநீர் வைகை ஆறு உள்ளிட்ட சில நீர்நிலைகளில் கலக்கிறது.

அதுபோல், புறநகரின் 28 வார்டுகளில் பாதாள சாக்கடை வசதியில்லாத ஏராளமான வார்டுகள் உள்ளன. அந்த வார்டுகளில் புதிய பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. முடிந்த இடங்களில் இன்னும் பாதாளசாக்கடை திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. அதனால், கழிவுநீர் அனைத்தும், அருகில் உள்ள நீர்நிலைகளில் கடத்தப்படுகிறது. நமக்கு நாமே திட்டத்தில் சில வார்டுகளில் போடப்பட்ட பாதாளசாக்கடை திட்டமும் சரியாகச் செயல்படுத்தப்படவில்லை.

மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படாததால் அன்றாடம் வெளியேறும் கழிவுநீர் 80 சதவீதம் எங்கே? என்று அதிமுக மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா, நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.

அப்போது அவர் கூறியதாவது: மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் நீரில் 80 சதவீதம் கழிவுநீராக மாறுகிறது என்பது அடிப்படை. அந்த வகையில் மாநகராட்சி விநியோகம் செய்யும் குடிநீரை கணக்கீடு செய்யும்போது, 124 எம்எல்டி கழிவு நீர் வெளியேற வேண்டும். இந்த கழிவுநீர் வெள்ளக்கல், சக்கிமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வந்து சேர வேண்டும்.

ஆனால், வெள்ளக்கல் நிலையத்துக்கு 10.5 எம்எல்டியும், சக்கிமங்கலம் நிலையத்துக்கு 6 எம்எல்டி கழிவுநீரும் வந்து சேருகிறது. மொத்தமே வெறும் 16.5 எம்எல்டி கழிவுநீர் மட்டுமே அன்றாடம் சுத்திகரிக்கப்படுகிறது. அப்படியென்றால், மீதமுள்ள 107.5 கழிவுநீர் எங்கே ? வார்டுகளில் சேகரமாகும் கழிவுநீரை பம்பிங் செய்யும் ஸ்டேஷன் மோட்டார்கள், ஜெனரேட்டர்கள் பல இடங்களில் பழுதடைந்துள்ளன.

மண்டலம்-1ல் 21 பம்பிங் ஸ்டேஷன் மோட்டர்களில் 13 மட்டுமே செயல்படுகின்றன. அதுபோல், மண்டலம்-2-ல் 58-ல் 34-ம், மண்டலம்-3ல் 59ல், 33ம், மண்டலம்-4ல் 29ல் 18ம், மண்டலம்-5ல் 45ல் 29 மட்டுமே செயல்படுகின்றன. மற்ற 85 மோட்டார்கள் செயல்படவில்லை. ஜெனரேட்டர்களை பொருத்தவரையில் மண்டலம்-1-ல் 1, மண்டலம்-2-ல் 1, மண்டலம்-4ல் 2ம், மண்டலம்-5ல் 2ம் பழுதடைந்துள்ளன. இவற்றைப் பழுது பார்த்து ஒட்டுமொத்த கழிவுநீரையும் சுத்திகரிக்க மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்கு அதிகாரிகள் சரியான பதில் அளிக்க முடியாமல் திணறினர்.

x