திருப்பூர்: மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் இளைஞர் விபாஸ்பன்வான் (30). இவர், அங்கிருந்து கேரளாவுக்கு பணி நிமித்தமாக ரயிலில் வந்தார். திருப்பூர் அருகே கூலிபாளையம் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது ஓடும் ரயிலில் இருந்து குதித்தார்.
இதில், அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தக் காயங்களுடன் இருந்த அவரை, அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அரசு மருத்துவமனையின் புதிய கட்டிடத்தில் செயல்படும் அவசர சிகிச்சைப் பிரிவில் விபாஸ்பன்வான் சிகிச்சை பெற்று வந்தார்.
மேற்கொண்டு சிகிச்சை பெற விரும்பாத அவர், மருத்துவமனையில் இருந்து வெளியேற முயன்றார். அப்போது, அங்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருந்ததால், 4-வது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்தார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில், தெற்கு போலீஸார் விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.