கோவையில் இருந்து 29 ரவுடிகள் வெளியேற்றம்; குற்றச் செயல்களை தடுக்க போலீஸ் அதிரடி!


கோவை: மாநகர காவல் ஆணையர் உத்தரவை தொடர்ந்து, கோவையில் இருந்து 29 ரவுடிகள் வெளியேற்றப்பட்டனர்.

கோவை மாநகரில் சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தவும், குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் ரவுடிகளை ஊரை விட்டு குறிப்பிட்ட மாதங்களுக்கு வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 120-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கோவையை விட்டு வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, மேலும் 29 பேர் கண்டறியப்பட்டு 6 மாதங்களுக்கு ஊரை விட்டு வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மாநகர காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநகரில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் சில நபர்கள் மீது உள்ள பயம் காரணமாக, அவர்களது குற்றச் சம்பவத்தாலோ, மிரட்டல்களாலோ பாதிக்கப்பட்ட நபர்கள் காவல் நிலையங்களுக்கு வந்து புகார் அளிக்க தயங்குகின்றனர். வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போது, பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் செய்தவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வந்து சாட்சி அளிக்க அஞ்சுகின்றனர். பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை கண்டறிந்து விளக்கம் கேட்கப்படுகிறது.

விளக்கம் திருப்தியில்லாத பட்சத்தில், சென்னை மாநகர காவல் சட்டம் 1888-ன் பிரிவு 51-ஏ-யின் படி தொடர்புடைய நபர்கள், ரவுடிகள் ஊரை விட்டு வெளியேற்றம் செய்யப்படுகின்றனர். அதன்படி, தற்போது 29 நபர்களின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்கப்பட்டு, அவர்களிடம் எழுத்துப் பூர்வமாக விளக்கம் கேட்கப்பட்டது. அதில் திருப்தி இல்லாததால் 29 நபர்களும் கடந்த 21ம் தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு கோவை மாநகர காவல் எல்லையை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன. இவர்கள், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னர் கோவை மாநகருக்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவார்கள், என்றனர்.

x