காவல் துறை நடவடிக்கையால் கொலைகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது: டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்


காவல் துறை மேற்கொண்ட முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கைகளால் தமிழகத்தில் பழிவாங்கல் மற்றும் ரவுடிகள் செய்யும் கொலைகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என டிஜிபி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: காவல் துறையினர் மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, கடந்த 2023-ம் ஆண்டைவிட கடந்த 2024-ம் ஆண்டில் தமிழகத்தில் கொலைகள், காய வழக்குகள், கலவரங்கள் போன்ற குற்றங்கள் குறைந்துள்ளன.

கொலை வழக்குகளின் நீண்டகால போக்கின் தரவுகளை பகுப்பாய்வு செய்ததில் 2017-2020 காலகட்டத்தில் கொலை வழக்குகள் ஆண்டுதோறும் படிப்படியாக அதிகரித்து, 2019-ம் ஆண்டில் அதிகபட்சமாக 1,745 வழக்குகளாக அதிகரித்தது. 2021 மற்றும் அதற்கு பிறகு, கொலை வழக்குகள் ஆண்டுதோறும் தொடர்ந்து குறைந்து வருகின்றன. 2024-ம் ஆண்டில் மிக குறைவாக, 1,563 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் இது மிகவும் குறைவாகும்.

ரவுடிகளின் செயல்பாடுகள்: கடந்த 4 ஆண்டுகளில், காவல் துறை எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால், ரவுடிகளால் செய்யப்படும் கொலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் 2024-ம் ஆண்டில் ரவுடி கொலைகள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. 2024-ம் ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் 352 கொலைகள் பதிவான நிலையில், 2025-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 340 ஆக குறைந்துள்ளது.

ரவுடிகளின் செயல்பாடுகளை தடுக்க காவல் துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 2024-ம் ஆண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் 3,645 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தற்போதைய செயல்பாடு அடிப்படையில் ரவுடிகளை மறுவகைப்படுத்திய பிறகு, ‘ஏ’, ‘ஏ பிளஸ்’ வகை ரவுடிகள் எண்ணிக்கை 50 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்துள்ளது. தீவிர செயல்பாடு உடைய ரவுடிகளையும் சிறப்பு கவனம் எடுத்து கண்காணித்து வருகிறோம். சிறைக்கு வெளியே மட்டுமின்றி, சிறைக்குள் இருக்கும் ரவுடிகளின் நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கண்காணிக்கிறோம்.

ரவுடிகளின் நிதி ஆதாரத்தை தடுக்கும் வகையில், நிதி விசாரணை நடத்த விரிவான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நிதி விசாரணை நடத்த 41 தீவிர செயல்பாடு உடைய ரவுடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை செய்யப்படாத ரவுடிகளுக்கு எதிராக நிதி விசாரணை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. காவல் துறையின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. தமிழகத்தில் பழிவாங்கல் மற்றும் ரவுடிகள் செய்யும் கொலைகள் கணிசமாக குறைந்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x