அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய கோரி வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு


சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை அன்பகத்தில் கடந்த 7-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், சைவம், வைணவம் மற்றும் பெண்களை இழிவுபடுத்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, திமுக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி.ஜெகந்நாத் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்ற முறையிலும், அமைச்சர் என்ற அடிப்படையிலும் பொன்முடியின் பேச்சு அரசியலமைப்பு சட்டத்துக்கும், அவர் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்துக்கும் எதிரானது. மேலும், குறிப்பிட்ட மதத்தை இழிவாக பேசுவது, கருத்து சுதந்திரத்தின்கீழ் வராது. எனவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று கோரியிருந்தார். தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், நீதிபதி முகமது ஷபீக் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ‘‘இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கூடுதல் மனுவில், வழக்குக்கு சிறிதும் தொடர்பில்லாமல் தமிழக முதல்வர் குறித்து தேவையற்ற அவதூறு கருத்துகளை தெரிவித்துள்ளார். அவற்றை நீக்க உத்தரவிட வேண்டும்’’ என்றார். அந்த கருத்துகளை மனுவில் இருந்து நீக்குவதாக மனுதாரர் ஜெகந்நாத் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, இந்த வழக்கில் தமிழக அரசு ஜூன் 5-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்

x