முட்டை மையோனைஸுக்கு ஓராண்டு தடை: தமிழக அரசு அரசிதழில் வெளியீடு


சென்னை: முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸுக்கு ஓராண்டு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

கிரில் சிக்கன், தந்தூரி, கபாப், ஷவர்மா போன்ற அசைவ உணவுகள் மட்டுமின்றி பர்கர், சான்விட்ச், சிப்ஸ், ப்ரெஞ்சு ப்ரைஸ் போன்ற துரித உணவுகளிலும் தவறாமல் இடம்பெறுவது மையோனைஸ். பச்சை முட்டை, உப்பு, சர்க்கரை, வெஜிடபிள் ஆயில், பூண்டு, மிளகு, வினிகர் போன்றவற்றைக் கொண்டு மையோனைஸ் தயாரிக்கப்படுகிறது. இதில் வெஜ் மையோனைஸ், முட்டை மையோனைஸ், பூண்டு மையோனைஸ் என பல வகைகள் உள்ளன.

இந்நிலையில் முறையற்ற வகையில் தயாரிக்கப்படும் மையோனைஸ் மற்றும் முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் பொது சுகாதாரத்துக்கு மையோனைஸ் அதிக பாதிப்பை விளைவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையொட்டி தமிழகத்தில் முட்டையிலிருந்த தயாரிக்கப்படும் மையோனைஸுக்கு ஓராண்டு தடைவிதித்து தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் ஆர்.லால்வேனா கூறியிருப்பதாவது:

மையோனைஸ் செய்ய பயன்படுத்தப்படும் பச்சை முட்டையில் (வேகவைக்காத முட்டை) சால்மோனெல்லா, லிஸ்டீரியா போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதால், உடல்நல பாதிப்புகள் அதிகம் வர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக அதில் இருக்கும் சால்மோனெல்லா பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாகவும் மாறலாம். அதேபோல் முறையற்ற வகையில் மையோனைஸை தயார் செய்வது, முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களும் பொது சுகாதாரத்துக்கு அதிக பாதிப்பை விளைவிக்கும்.

எனவே, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின்படி, முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடைவிதிக்கப்படுகிறது. அதன்படி, பொதுமக்கள் நலன் கருதி தமிழகத்தில் எந்த பகுதியிலும், மையோனைஸ் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

இந்த தடை உத்தரவு ஏப்.8-ம் தேதியிலிருந்து ஓராண்டு காலத்துக்கு அமலில் இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தெலங்கானா மாநிலத்தில் மையோனைஸ் தயாரிக்கப்படுவதற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

x