தென்மாவட்டங்களில் இருந்து புதிய ரயில்களை இயக்க மதுரை கோட்ட ஆலோசனைக் குழு கூட்டத்தில் எம்பிக்கள் வலியுறுத்தல்


மதுரை: தென்மாவட்டங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு புதிய ரயில்களை இயக்கவேண்டும் என மதுரை கோட்ட ஆலோசனைக்குழு கூட்டத்தில் எம்பிக்கள் வலியுறுத்தினர்.

மதுரை ரயில்வே கோட்ட அளவில் ரயில்வே திட்டங்கள், புதிய ரயில்கள், வழித்தடங்கள், பயணிகளுக்கான வசதிகள் குறித்து எம்.பிக்கள் ஆலோசனைக்குழு கூட்டம் மதுரை ரிங்ரோட்டிலுள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடந்தது. தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்என்.சிங் தலைமை வகித்தார். இக்கூட்டத்திற்கு 21 எம்.பிக்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில், சு. வெங்கடேசன் (மதுரை), வைகோ (மாநிலங்களவை), தங்கதமிழ்ச்செல்வன் (தேனி), சச்சிதானந்தம் (திண்டுக்கல்), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), ராணி ஸ்ரீகுமார்(தென்காசி) ராபர்ட் புரூஸ்(நெல்லை), தர்மர் (மாநிலங்களவை ), துரை வைகோ (திருச்சி), அப்துல்லா (புதுக்கோட்டை), கொடி கொனில் சுரேஷ் (கேரளா- மாவேலிக்கரை) ஆகிய 11 எம்பிக்கள் பங்கேற்றனர்.

ப.சிதம்பரம் (மாநிலங்களவை), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), கனிமொழி (தூத்துக்குடி), ஜோதிமணி (கரூர்), நவாஷ்கனி (ராமநாதபுரம்), ஈஸ்வர சுவாமி (பொள்ளாச்சி), பிரேம் சந்திரன் (கொல்லம்) ஆகிய 7 எம்பிக்கள் பங்கேற்கவில்லை. எம்பிக்களின் கோரிக்கைகள் குறித்து பேசுவதற்கு வைகோ எம்.பி ஒருங்கிணைப்பு செய்தார். இக்கூட்டத்தில் கடந்த கூட்டத்தில் ரயில்வே வளர்ச்சி திட்டங்கள் குறித்து எம்பிக்கள் வலியுறுத்திய கோரிக்கைகளின் நடவடிக்கை பற்றி விவாதிக்கப்பட்டது. இதற்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பதிலளித்தனர். தொடர்ந்து பல்வேறு புதிய கோரிக்கைகள் குறித்து பேசிய எம்.பிக்கள், தங்களது எழுத்து பூர்வ மனுக்களை கொடுத்தனர். காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் 1 மணி வரையிலும் நடந்தது.

வைகோ எம்.பி கூறியது: ''அவரவர் தொகுதிக்கு தேவையான ரயில்வே திட்டம், அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தினர். திண்டுக்கல்- சபரிமலை புதிய வழித்தடம், மதுரையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு புதிய ரயில்கள் குறித்து கோரிக்கை வைத்தோம். பிரிட்டீஷ் காலத்தில் இருந்து செயல்பட்ட கரிவந்தநல்லூர் ரயில் நிலையம் செயல்படாமல் உள்ளது. மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தினேன்.

ரயில்வே வளர்ச்சி திட்டம் குறித்து அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது பற்றி எம்.பிக்கள் நன்றாக பேசினர். ரயில்வே தொடர்பான கூட்டம் ஒன்றில் பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை பங்கேற்றது முறைகேடானது. இதற்கு அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கவில்லை. ரயில்வே துறையில் இந்தியை முதன்மைப்படுத்த கூடாது என, வலியுறுத்தினோம். சில காரணத்திற்கு தவிர்த்த ரயில் நிறுத்தங்களை மீண்டும் ஏற்படுத்தவேண்டும். ரயில்வே துறைக்கென தனி பட்ஜெட் இருந்தபோது, புதிய வழித்தடம், ரயில்கள் போன்ற வளர்ச்சி திட்டங்கள் நிறைவேறின. ரயில்வே பட்ஜெட் ரத்து செய்தது தவறு, அநியாயம்.'' இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறியது: ''ரயில்வேயில் ஹிந்தி வார்த்தைகள் மூன்று மொழிகளிலும் (தமிழ், ஆங்கிலம், ஹிந்தி) எழுதப்படுகின்றன. அந்த மூன்று மொழி களிலும் ஒரே ஹிந்தி வார்த்தையை எழுதி, மாநில மொழிக்கு மரியாதை காட்டப்படவில்லை. இது தொடர்பாக உத்தரவு வழங்கிய அதிகாரி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். சார்மினார், ஹவுரா எக்ஸ்பிரஸ்ரயில்கள் மதுரை, நாகர்கோவிலில் இருந்தும்,ஹைதராபாத் – தாம்பரம் ரயில் மதுரையிலிருந்து இயக்க கோரியுள்ளோம். மதுரை கூடல்நகர் ரயில்நிலையத்தை 2வது முனையாக மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெமோ ரயில்கள், பகல்நேர ரயில்கள், மற்றும் தென் பகுதியில் இருந்து மேற்கே – தெற்கே இணைப்பு ரயில்களை அதிகரிக்க வேண்டும்'' என்றார்.

மாணிக்கம் தாகூர் கூறியது: ''எம்.பி மயிலாடுதுறை பகுதிக்கான ரயில்வே திட்டங்கள் குறித்து ஆன்லைனில் ரயில்வே துறை ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தியது சம்பந்தப்பட்ட எம்பிகே தகவல் தெரிவிக்காமல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கொண்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மக்களவை சபாநாயகர் இடம் புகார் மனு அளிக்க உள்ளோம்.'' இவ்வாறு கூறினார்.

நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ்: நெல்லை ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிக்கென ரூ.100 கோடி ஒதுக்கியது மகிழ்ச்சி. நெல்லை- செங்கோட்டை பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க கோரினேன். 10ல் இருந்து 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என, பொதுமேலாளர் தெரிவித்தார். நெல்லை ரயில் நிலையத்திற்கு வந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களுக்கான உரிமக்கட்டணத்தை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பற்றி வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

தென்காசி எம்,பி ராணி ஸ்ரீகுமார்: ''சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்கவேண்டும். சோழாபுரம், கரிவந்தநல்லூர், நயினாரகம் ரயில் நிலையங்களை மீண்டும் செயல்படுத்தவேண்டும். 2017 அறிவித்த முன்பதிவில்லாத தாம்பரம்- சென்னை அந்தியோதயா ரயிலை உடனே இயக்கவேண்டும். சென்னை- கொல்லத்திற்கு வந்தே பாரத் ரயில் விடவேண்டும். கோவை- மதுரை இன்டர் சிட்டி ரயிலை செங்கோட்டைக்கு நீடிக்கவேண்டும். ரயில் நிலையங்கள், ரயில்களில் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமராக்கள் பொருத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கை முன்வைத்தேன்.'' இவ்வாறு கூறினார்.

ராமநாதபுரம் எம்,பி தர்மர்: ''ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுக்கு தமிழ்நாட்டில் மையங்கள் அமைக்கவேண்டும். ராமேசுரவம்- சென்னைக்கு புதிய வந்தோ பாரத் ரயில் இயக்கவேண்டும். மானாமதுரை வழியாக இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் ஓட்டவேண்டும். பாம்பன் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை கூட்டத்தில் வலியுறுத்தினேன்.'' இவ்வாறு கூறினார்.

தமிழ் தெரிந்த அதிகாரிகளை நியமிக்கவேண்டும்: தங்கதமிழ்செல்வன் - இக்கூட்டத்தில் தேனி எம்.பி தங்கதமிழ்ச்செல்வன் பேசும்போது, ''ரயில்வே ஆலோசனைக்குழு கூட்டத்திற்கு தமிழ் தெரிந்த ரயில்வே அதிகாரிகள் வரவேண்டும். தெற்கு ரயில்வேயில் மாநில மொழி தெரிந்தவர்களை நியமித்தால் தானே ரயில்வே குறித்த மக்கள் பிரச்னைகளை நாங்கள் எடுத்துரைக்க முடியும். இந்த நடைமுறையை மத்திய ரயில்வே வாரியம் மேற்கொள்ளவேண்டும். அடுத்த கூட்டத்தில் இதை நடைமுறைப்படுத்துங்கள்,'' என்றார்.

x