“விண்வெளி துறையில் 9 தளங்களில் இந்தியா முதலிடத்தில் உள்ளது” -  இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் பெருமிதம்


நாகர்கோவிலில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

நாகர்கோவில்: “இந்தியா வேறு எந்த நாட்டுடனும் போட்டி போடும் மனநிலையில் செயல்படாமல், நாட்டு மக்களின் தேவைக்கான திட்டங்களை வகுத்து செயல்பட்டு வெற்றிகரமாக முன்னேறி வருவதாக” இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் செய்தியாளர்களை இன்று (ஏப்.24) சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “இஸ்ரோ இந்த ஆண்டு பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட ‘ஆதித்யா எல் ஒன்’ செயற்கைக்கோளில் இருந்து இந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி தரவுகள் வந்துள்ளன. சூரியன் குறித்து பல்வேறு ஆய்வுகள் செய்வதற்கு இந்த செயற்கைக்கோள் உதவும்.

ஜனவரி 16-ம் தேதி 2 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டன. இதன்மூலம் ‘விண்வெளி டாக்கிங்’ தொழில்நுட்பத்தை கொண்ட 4-வது நாடு எனும் பெருமையை பெற்று இந்தியா சாதனை படைத்தது. பின்னர் மார்ச் 13-ம் தேதி இந்த இரட்டை செயற்கைக்கோள்கள் மீண்டும் பிரிக்கப்பட்டு சோதனை நடந்தது. 1980-ம் ஆண்டு முதலாவதாக விண்ணுக்கு ராக்கெட் அனுப்பப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஜனவரி 29-ம் தேதி நூறாவது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டடுள்ளது.

இது பெரும் வெற்றியாகும். நம்மிடம் லிக்யூட் ராக்கெட் இன்ஜினில் பெரிய கெப்பாசிட் இன்ஜின் என்பது விகாஷ் இன்ஜின் ஆகும். அது 80 டன் திறன் கொடுக்கும். இப்போது திரவ ஆக்சிஜனையும், மண்ணெண்ணெய்யையும் வைத்து 200 டன் திறன் உள்ள செமிக்கிரோ இன்ஜினை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக மகேந்திரகிரியில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் சோதனை கூடம் ஒன்றை பிரதமர் மோடி கடந்த ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன் முதற்கட்ட சோதனை ஏற்கெனவே வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது சோதனை நடைபெறுகிறது.

இஸ்ரோ மேற்கொள்ளும் பல ஆராய்ச்சிகள் அனைத்தும் மாணவர்களுக்கு பயன் தருபவை. மாணவர்கள் தயாரிக்கும் செயற்கைக்கோள்கள் அனைத்தையும் இஸ்ரோ இலவசமாக ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பி வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்து நூறாவது ஆண்டில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் வகையில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், இஸ்ரோவும் 2040-ம் ஆண்டிற்குள் விண்வெளி துறையில் வளர்ச்சி அடைந்த துறையாக மாற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விண்வெளி துறையில் 9 தளங்களில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சந்திரயான் 1 மூலம் நிலவில் தண்ணீர் உள்ளது என்பதை இந்தியா தான் கண்டுபிடித்தது. சந்திரயான் இரண்டில் பயன்படுத்தப்படும் கேமரா தொழில்நுட்பத்தில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சந்திரயான் 3 மூலம் நிலவின் தென் துருவத்தில் இறங்கிய உலகின் முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது. ஒரே ராக்கெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட செயற்கை கோள்களை அனுப்பிய உலகின் முதல் நாடாகவும் இந்தியா மாறியுள்ளது.

கிரயோஜனிக் தொழில்நுட்பத்தை ஏனைய நாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்த நிலையில், அதை வெற்றிகரமாக செயல்படுத்தி உலகில் உள்ள 6 நாடுகளில் ஒரு நாடாக இந்தியா மாறியுள்ளது. மார்க் 3 ராக்கெட்டுக்கு 3 இன்ஜின்கள் பயன்படுத்தி வெற்றிகரமான சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்தியா வேறு எந்த நாட்டுடனும் போட்டி போடும் மன நிலையில் செயல்படவில்லை. இந்திய நாட்டின் மக்களின் தேவைக்கான திட்டங்களை வகுத்து செயல்பட்டு வெற்றிகரமாக முன்னேறி வருகிறது,” என்றார்.

x