மதுரை: குடிநீர், பாதாளசாக்கடை இணைப்பு டெபாசிட் தொகையை உயர்த்துவதற்கு கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மதுரை மாநகராட்சி பட்ஜெட் விவாதம் மற்றும் சாதாரண கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. ஆணையாளர் சித்ரா, துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.
மண்டலத்தலைவர் வாசுகி: எம்எல்ஏ, எம்பி-க்களை போல கவுன்சிலர்களுக்கு வழங்கப்படும் ரூ.25 லட்சம் நிதியை முழுமையாக வழங்கி அவர்களே அவர்களுடைய வார்டுகளுக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும். பணிகள் முடிந்து தயார்நிலையில் உள்ள ஆணையூர், மேலடை, நாகனாகுளம் மூன்று மின் மயானங்கள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மைப்பணி மேற்கொள்ள தேவையான அத்தியாவசிய தடவாளப்பொருட்கள் இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். குடிநீர் குழாய், பாதாளசாக்கடை பணிக்காக புதிதாக போட்ட சாலைகளை ஒப்பந்தத்தொழிலாளர்கள் பாழாக்கிப்போட்டுள்ளனர். அந்த இடத்தில் மீண்டும் சாலை போட வேண்டும். சிமெண்ட் பூச்சுப் போட்டால் மழைக்கு மீண்டும் சாலை பெயர்ந்துவிடும்.
ஆணையாளர் சித்ரா: தடவாளப்பொருட்கள் என்னென்ன தேவை என பட்டியல் கொடுங்கள். அவற்றை வாங்கி கொடுக்க ஏற்பாடு செய்கிறேன். சேதமடைந்த தார் சாலைகளை மீண்டும் போடுவதற்கு ஆலோசிக்கப்படும்.
மண்டலத்தலைவர் சரவணபுவனேஷ்வரி: மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடங்களை (Open Space Reservation) பல வார்டுகளில் இன்னும் ஆணையாளர் பெயருக்கு மாற்றப்படாமல் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால் சர்வே நடக்கிறது என்று தட்டிக்கழிகிறார்கள். எது உண்மை. இப்படி ஆணையாளர் பெயருக்கு மாற்றாததாலே, பல இடங்களில் தனியார் ஆக்கிரமித்து கொண்டார்கள். மாநகராட்சி பள்ளிகளுக்கு குடிநீர், கழிப்பறை வசதிகள் அதிகம் தேவைப்படுகிறது. மாணவர்கள் நலன் கருதி முதலில் இந்த குறைபாடுகளை போக்க வேண்டும். 23,24,27வது வார்டில் மீனாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டிக்கிடக்கிறது. அங்கு பல்வேறு சட்டவிரோத செயல்கள் நடக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு அங்கு சென்று கெட்டுப்போய்விடுகிறார்கள். அந்த இடங்களை யார் பராமரிப்பது என முடிவெடுத்து, தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணையாளர் சித்ரா: எந்தெந்த பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதியில்லை என்பதை ஆய்வு செய்ய கல்வி அலுவலருக்கு கூறுகிறேன்.
மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வி: திருச்சி, கோவை மாநகராட்சிகளுக்கு கவுன்சிலர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. ஆனால், நமக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படுகிறது. இதை ரூ.40 லட்சமாக உயர்த்தி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். என்னுடைய வார்டில் பாதாளசாக்கடை பராமரிப்பை எப்போது மேற்கொள்வீர்கள். கழிவுநீர் பெருக்கெடுத்து ரோட்டில் ஓடுகிறது. அமைச்சர் பழனிவேல் ராஜன், நாங்கள் எதோ கவனிக்காமல் இருப்பதாக நினைக்கிறார்.
மாநகராட்சி எதிர்கட்சித்தலைவர் சோலைராஜா: பாதாளசாக்கடை, குடிநீர் இணைப்புக்கான டெப்பாசிட் தொகை உயர்த்தப்படுவதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்பிற்கான டெபாசிட் குடியிருப்பு கட்டிடத்திற்கு ரூ.3,000, வணிக கட்டிடத்திற்கு ரூ.10,000 என இருந்தது. அதுபோல், பாதாளசாக்கடை இணைப்பதற்கான டெப்பாசிட் குடியிருப்புகளுக்கு ரூ.5,000, வணிக கட்டிடத்திற்கு ரூ.10,000 என இருந்தது. இந்த டெபாசிட் தொகை தற்போது பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல், சாலைகளை சேதப்படுத்தி குடிநீர், பாதாளசாக்கடை இணைப்பு கொடுத்தால் அதற்கு மாநகராட்சி பெறும் சாலை பராமரிப்பு கட்டணமும் 5 சதவீதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வை திரும்ப வாபஸ் பெற வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் விஜயா: மக்கள் மீது ஏற்கெனவே வரி சுமை அதிகமாக உள்ளது. மீண்டும் மீண்டும் வரியையும், ‘டெபாசிட்’டையும் உயர்த்தி மக்களை தொந்தரவு செய்ய வேண்டாம். அதனை குறைக்க மறுபரிசீலனை செய்யுங்கள். நாய்கள் தொல்லை மிக அதிகமாக இருக்கிறது. நாய்களை பிடிக்க நீங்கள் ஏதோதோ காரணங்களை கூறுகிறீர்கள். மக்களிடம் நான் பதில் பேச முடியவில்லை. இரவு கூட தூங்க விடுவதில்லை. அதிகாலை 5 மணிக்கெல்லாம் போன் செய்ய தொடங்கிவிடுகிறார்கள். மக்கள் பிரச்சினையில் அதிகாரிகள் அலட்சியம் காட்ட வேண்டாம். மண்டலங்களை பொறுத்தவரையில் மத்தி, வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற கதையில்தான், எங்கள் தெற்கு மண்டலத்தின் வளர்ச்சிப்பணிகள் நிலை உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் முனியாண்டி பேசுகையில், நாட்டை எப்படி தாமரை நாசப்படுத்துகிறதோ, அதேபோல் மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளக்கல் பகுதி நீர்நிலைகளை மாசுப்படுத்தும் ஆகாயதாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார். அதற்கு பாஜக கவுன்சிலர் பூமாஸ்ரீ எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
முதல்வருக்கு அதிமுக எதிர்கட்சித் தலைவர் 'திடீர்' புகழாரம்: அதிமுக எதிர்கட்சித்தலைவர் சோலைராஜா பேசுகையில், ‘‘அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரர் நவீன்குமார் குடும்பத்திற்கு இதுவரையில் எந்த ஆட்சியிலும் இல்லாதவகையில் ரூ.3 லட்சம் நிவாரணத்தொகையை முதல்வர் வழங்கியுள்ளார். இதுபோல், இதுவரையில் எந்த ஆட்சியிலும் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரருக்கு கொடுத்ததில்லை. அதற்கு தமிழக அரசையும், முதல்வரையும் நான் பாராட்டுகிறேன். அதேபோல், உயிரிழந்த மாடுபிடி வீரர் தங்கைக்கு மாநகராட்சி ஆணையாளர் சித்ரா பெரும்பாடுபட்டு, தற்காலிக பணியாளர் பணி வழங்க ஏற்பாடு செய்துள்ளார். அவரையும், அதற்கு துணையாக இருந்த நகர்நல அலுவலர் அபிஷேக்கையும் பாராட்டுகிறேன், ’’ என்றார்.
நானே திருக்கல்யாணத்திற்கு சென்றதில்லை: மேயர்
மண்டலத்தலைவர் சரவணபுவனேஷ்வரி, மீனாட்சிம்மன் கோவில் பகுதி கவுன்சிலர் பாஸ்கரன் ஆகியோர் பேசுகையில், ‘‘ஒவ்வொரு முறையும் கவுன்சிலர்களுக்கு சித்திரைத்திருவிழாவின் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரே ஒரு டோக்கன் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த முறை குடும்பத்தோடு இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க ‘டோக்கன்’கள் பெற்று தர வேண்டும், ’’ என்றனர். அதற்கு மேயர் இந்திராணி, நானே இதுவரை திருக்கல்யாணம் நிகழ்ச்சிக்கு சென்றதில்லை. தற்போது வரை டிவியில்-தான் சித்திரைத்திருவிழா நிகழ்ச்சிகளை பார்க்கிறேன், இந்த முறை கூடுதல் ‘டோக்கன்’கள் கேட்டுப்பார்ப்போம், ’’ என்றார். அதற்கு கவுன்சிலர் பாஸ்கரன், ‘‘சென்ற முறை கொடுத்த ஒரு டோக்கனை எடுத்து சென்றபோதும், என்னை உள்ளே விடாமல் வெளியே நிறுத்தி வைத்துவிட்டார்கள். ரொம்ப அசிங்கமாக போய்விட்டது, ’’ நொந்துகொண்டார்.