நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்: உறுப்பினர் வெளிநடப்பால் சலசலப்பு


திருநெல்வேலி: திருநெல்வேலியில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களிடையே வாக்குவாதம், கலகலப்பு பேச்சு, பேசவாய்ப்பு மறுத்ததால் வெளிநடப்பு உள்ளிட்டவை அரங்கேறின.

திருநெல்வேலி மாநகராட்சி கூட்டம் மேயர் கோ.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் என்.ஒ. சுகபுத்ரா, துணை மேயர் கே.ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்கள், மறைந்த முன்னாள் கவுன்சிலர் பரமசிவபாண்டியன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தச்சநல்லூர் மண்டல அலுவலக வணிக வளாக கட்டிடத்துக்கு டாக்டர் மு.கருணாநிதி மாளிகை என பெயர் சூட்டுவதற்கான சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் ஒவ்வொருவராக பேச அனுமதிக்கப்பட்டனர். அப்போது மேலப்பாளையம் பகுதியில் அமைக்கப்படும் சமுதாய நலக்கூடம் எந்த வார்டுக்கு உட்பட்டது என்பது தொடர்பாக மேலப்பாளையம் மண்டல தலைவர் கதிஜா இக்லாம் பாசிலாவுக்கும் மற்றொரு திமுக கவுன்சிலர் ரம்ஜான் அலிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மண்டல தலைவர் பேசும்போது, கடந்த 2019-ம் ஆண்டு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேலப்பாளையம் பகுதியில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. அந்த சமுதாய நலக்கூடம் கட்டும் இடம் அப்போது வார்டு 37-ஆக இருந்தது. அதன் பின்னர் வார்டுகள் மறு வரையறை செய்யப்பட்டது. கடந்த 2023 -ம் ஆண்டு வரை அந்த மண்டபம் கட்டும் பணி முடிவடையவில்லை. தற்போது பணிகள் பாதியில் கிடக்கிறது. ரூ.1.40 கோடி அந்த மண்டபத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட மண்டபம் அமையும் இடம் தற்போது எந்த வார்டில் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்டுபேசிய கவுன்சிலர் ரம்ஜான் அலி, எங்களுடைய ஜமாத்துக்கு சொந்தமான இடத்தில் மக்கள் நலனுக்காக மண்டபம் கட்டுவதற்கு இடம் கொடுக்கப்பட்டது என்று பேசும்போது, திடீரென்று மண்டல தலைவரான திமுக பகுதி செயலாளர் துபாய் சாகுல் மாமன்றத்துக்குள் எழுந்து வந்து வாக்குவாதம் செய்ய முயன்றால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கவுன்சிலரை தவிர்த்து வேறுநபர்கள் யாரும் கூட்டரங்கில் குறுக்காக வந்து பேசக்கூடாது என்று மேயர் அறிவுறுத்தினார். அந்த சமுதாய நலக்கூடம் தொடர்பான பிரச்சனையை தொடர்பாக மாநகராட்சி ஆணையர் தலைமையிலான குழு விசாரித்து முடிவு செய்யும் என்றும் கூட்டத்தில் பத்திரிகையாளர்களை தவிர யாரும் புகைப்படம்,விடியோ எடுக்க கூடாது என்றும் உத்தரவிட்டார்.

திமுக கவுன்சிலரால் கலகலப்பு: கூட்டத்தில் கவுன்சிலர் பேச்சியம்மாள் பேசும்போது, மாமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ரூ.10 லட்சம் என கடந்த பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் வார்டுகளில் தேவையான பணி தொடர்பாக கடிதம் அளிக்க மாமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளீர்கள். உண்டான டெண்டரிலேயே எந்த பணியும் நடக்கவில்லை. அந்த பணியை முதலில் முடியுங்க.

அதன் பின்னர் ரூ.10 லட்சம் தொடர்பான பணியை தொடங்குங்கள் என்று குறிப்பிட்டார். மேலும், தமிழ்நாடு அரசு அனைத்து அறிவிப்புகளையும், அரசாணைகளிலும் தமிழில் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. அதன்படி நம் மாநகராட்சியிலும் அனைத்து அறிவிப்புகள் மற்றும் அரசாணைகளையும் தமிழில் தான் வெளியிட வேண்டும் என்றவர், (மேயரை நோக்கி) நீயும் டிகிரி இல்லை. நானும் டிகிரி இல்லை. எனவே அனைத்து அறிவிப்புகளும் அரசாணைகளையும் தமிழில் வெளியிட வேண்டும் என்றார்.

அப்போது கூட்ட அரங்கில் சிரிப்பலை எழுந்தது. பெண் கவுன்சிலர்கள் என்றால் எந்த பணிகளும் நடக்கவில்லை. ஆண் கவுன்சிலர்கள் பைல் கொண்டு வந்தால் உடனடியாக பணிகள் நடக்கிறது. அறிக்கைகளை ஆங்கிலத்தில் வைத்தால் என்ன செய்வது, எப்படி படிப்பது, எங்கள் முதல்வர் படிக்காதவர்களை கவுன்சிலர்களாக வரவைத்துள்ளார். பணிகள் எதும் நடக்கவில்லை எங்கள் பகுதி மக்கள் என்னை வார்டுக்குள் வாக்கு கேட்டு வரக்கூடாது என சொல்ல விட்டனர் என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

திமுக கவுன்சிலர் வெளிநடப்பு: கூட்டத்தில் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டு திமுக கவுன்சிலர் ரவீந்தரும், அதிமுக கவுன்சிலர் சந்திரசேகரும் ஒரே நேரத்தில் வாய்ப்பு கேட்டபோது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுக கவுன்சிலருக்கு மேயர் வாய்ப்பு வழங்கியதை அடுத்து ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலர் ரவீந்தர், திமுகவை சேர்ந்த கவுன்சிலருக்கு பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதிமுக கவுன்சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று தெரிவித்து தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிந்துவிட்டு கூட்ட அரங்கிலிருந்து வெளி நடப்பு செய்தார். அவர் தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிந்ததால் அருகே இருந்த கவுன்சிலர்கள் மீது தண்ணீர் முழுதும் பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

x