சென்னை: தமிழகத்தில் தினமும் 54 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏ கோவிந்தசாமி பேசும்போது, "அதிமுக ஆட்சியில் பால் உற்பத்தியைப் பெருக்கவும், பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அத்திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பால் கொள்முதல் குறைந்துள்ளது. இது தனியாரை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. எனவே பால் கொள்முதலை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்குமா?" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பால்வளத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில் அளித்து பேசியதாவது: அதிமுக ஆட்சியில் நாள்தோறும் 23 லட்சம் லிட்டர் பால்தான் கொள்முதல் செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் அது 34 லட்சமாக உயர்ந்துள்ளது. வழக்கமாக மே, ஜூன் மாதங்களில் பால் உற்பத்தி குறைவாக இருக்கும். கறவை மாடு வாங்க ரூ.6 ஆயிரம் கோடி கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி கடன் கொடுக்க இருக்கிறோம்.
ஒரு சங்கம் ஆரம்பித்தால் ரூ.1 லட்சம் நிதி, கறவை மாடு வாங்க கடன் உள்ளிட்டவற்றை வழங்கித்தான், பால் உற்பத்தியை அதிகரித்து உள்ளோம். இந்திய அளவில் ஒரு லிட்டர் பால் ரூ.40 என மிகக் குறைந்த விலையில் விற்கப்படுவது தமிழகத்தில்தான். பிற மாநிலங்களில் ஒரு லிட்டர் ரூ.54 வரையும், தனியாரில் ரூ.56 வரையும் விற்கப்படுகிறது.
பால் கூட்டுறவு சங்கம் மூலமாக அதிக அளவு பால் உற்பத்தி செய்ய வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தினமும் 54 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி இலக்கை அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.